ஜெயிக்கிறோமோ, தோக்குறோமோ - ஆனா சண்டை செய்யனும்; வேற லெவலில் கேட்ச் பிடித்த சுப்மன் கில்
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி கான்பூரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 345 ரன்கள் எடுத்தது.
இந்திய அணியில் அதிகபட்சமாக ஸ்ரேயஸ் ஐயர் 105 ரன்களும், சுப்மன் கில் 52 ரன்களும் எடுத்தனர். இதன்பின் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 296 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக டாம் லதாம் 95 ரன்களும், வில் யங் 89 ரன்களும் எடுத்தனர்.
இதனையடுத்து 49 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய இந்திய அணி, 7 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் எடுத்த போது டிக்ளேர் செய்து, நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு 284 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
இரண்டாவது இன்னிங்ஸில் அதிகபட்சமாக ஸ்ரேயஸ் ஐயர் 65 ரன்களும், சஹா 61 ரன்களும் எடுத்தனர். இதன்பின் 284 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று கடின இலக்கை துரத்தி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு அந்த அணியின் துவக்க வீரரான வில் யங் 2 ரன்னில் விக்கெட்டை இழந்து மிகப்பெரும் ஏமாற்றம் கொடுத்தாலும், மற்றொரு துவக்க வீரரான டாம் லதாம் 52 ரன்கள் எடுத்து கொடுத்தார்.
வில்லியம் 110 பந்துகளில் 36 ரன்களும், கேன் வில்லியம்சன் 112 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து கொடுத்தாலும், அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வெளியேறியதால் 155 ரன்கள் எடுத்த போது நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்தது.
நியூசிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் அனைவரும் விக்கெட்டை இழந்துவிட்டதாலும், இந்திய அணியின் கைவசம் 10 ஓவர்களுக்கு மேல் இருந்ததாலும், இந்திய அணி இந்த போட்டியில் அசால்டாக வெற்றி பெறும் என்றே கருதப்பட்டது ஆனால் களத்தில் இருந்த ரச்சின் ரவீந்திரா மற்றும் அஜாஸ் பட்டேல் இறுதி பந்து வரை அசராமல் நிலைத்து நின்று விளையாடியதால் இரு அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.