திமுகவிலிருந்து விலகிய சுப்புலட்சுமி ஜெகதீசன்... இது தான் முக்கிய காரணம் - பரபரப்பில் திமுக
திமுகவில் இருந்து சுப்புலட்சுமி ஜெகதீசன் விலகியதற்கு 4 முக்கிய காரணங்கள் சொல்லப்படுகிறது.
முக்கிய பொறுப்பு
அரசியலில் இருந்து விலகுவதாக திமுகவின் துணை பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் அறிக்கை வெளியிட்டு இருப்பது அக்கட்சி தொண்டர்களிடையே பெரும் அரசியல் புயலை கிளப்பியுள்ளது.
திமுகவின் தலைமை கழக நிர்வாகியாக கருதப்படக் கூடிய துணை பொதுச் செயலாளர் பதவி கௌரவமான பதவி மட்டும் அல்ல. தலைமை கழகத்தின் உயர் பொறுப்புகளுக்கு செல்ல ஒரு நுழைவாயிலும் கூட அந்த பதவி.
திமுகவில் தற்போது சுப்புலட்சுமி ஜெகதீசன், ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ் ஆகிய 5 பேர் துணை பொதுச் செயலாளராக இருந்து வருகின்றனர்.
கடந்த செப்டம்பர் 15 அம் தேதி விருதுநகரில் திமுகவின் முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சுப்புலட்சுமி ஜெகதீசன் கலந்து கொள்ளவில்லை. காரணம் அவர் தலைமை மீது கடும் காட்டமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
பழமை வாய்ந்த அரசியல்வாதி
சுப்புலட்சுமி ஜெகதீசன் கட்சி சீனியர்களின் மிகவும் முக்கயமான ஒருவர். திமுக, அதிமுக என இரு பெரும் கட்சிகளில் நெடுங்காலம் பயணித்து இருக்கிறார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர்களாக எம்.ஜி.ஆர். மு.கருணாநிதி ஆகியோருடன் நெடுங்காலம் பயணித்த ஒரு பழம் பெரும் அரசியல்வாதியாக இருந்து வருகிறார்.
திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளிலும் பல முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கொடுமூடியில் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வந்த சுப்புலட்சுமி ஜெகதீசன், எம்.ஜி.ஆர் மூலம் அறிமுகம் செய்யப்பட்டார்.
1977ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். எம்.ஜி.ஆரின் அமைச்சரவையில் 1978 முதல் 1980 வரை கைத்தறி துறை அமைச்சராகவும் இருந்துள்ளார்.
தேர்தலில் வெற்றி - தோல்வி
பின்னர் 1980ல் திமுகவில் இணைந்த அவர் 1989ல் ஈரோடு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அதன் பின் கலைஞர் கருணாநிதியின் அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சராக 1991 வரை பதவி வகித்தார்.
1991ல் நடைபெற்ற தேர்தலில் வெள்ளக்கோவில் தொகுதியில் போட்டியிட்ட அவர் தோல்வியடைந்தார்.
இதற்கு இடையில் தான் தமிழ் ஈழ விடுதலை புலிகளுக்கு உதவியதாக தடா சட்டத்தின் கீழ் கணவர் ஜெகதீசன் உடன் சேர்ந்து 1992 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு 11 மாதம் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.
அதன் பின் 1993 ஆம் ஆண்டு மக்களவை தொகுதியில் போட்டியிட்ட அவர் தோல்வியடைந்தார். பின்னர் 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட அவர் வெற்றி பெற்றார்.
மீண்டும் 2001 சட்டமன்ற தேர்தலில் அதே மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட அவர் தோல்வி அடைந்தார்.
2004 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலிதல் திருச்செங்கோடு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அமைச்சரவையில் சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்புத்துறை இணை அமைச்சராக பதவி வகித்தார்.
கட்சி மேலிடத்திற்கு புகார்
இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அதே மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட சுப்புலட்சுமி ஜெகதீசன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சரஸ்வதியிடம் 281 வாக்குவித்தியாசத்தல் தோல்வியை தழுவினார்.
இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த சுப்புலட்சுமி இந்த தோல்விக்கு ஈரோடு மாவட்டம் கொடுமூடி, மொடக்குறிச்சி ஆகிய 2 தொகுதிகளைச் சேர்ந்த ஒன்றிய செயலாளர்கள் தான் காரணம் என்றும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கட்சியின் தலைமையிடம் புகார் அளித்தார்.
அவரின் புகார் கடிதத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை திமுக தலைமை. இந்த நிலையில் தான் ஈரோடு மேற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முத்துசாமி திமுக தலைமையிடம் அதிகம் நெருக்கம் காட்டியதாக கூறப்படுகிறது.
அமைச்சரின் விசுவாசம்
அதன் பின் தான் வீட்டு வசதி துறை அமைச்சரான அவர் பலம் வாய்ந்தவராக வலம் வந்துள்ளார். அவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல முறை பாராட்டியதாகவும் தகவல்கள் கூறுகின்றது.
இந்த நிலையில் தான் ஒன்றியம் முதல் மாவட்டம் வரையிலான திமுகவின் கழக அமைப்பு தேர்தல் நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
அதில் 25 பொறுப்பாளர்களுக்கான பதவிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதில் சுப்புலட்சுமி புகார் தெரிவித்த 2 ஒன்றிய செயலாளர்களும் இருந்துள்ளனர்.
இந்த நிலையில் 3 நாள் பயணமாக கோவை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகஸ்ட் 25ம் தேதி ஈரோடு மாவட்டத்தில் அரசு நடைபெற்ற அரசு விழாக்களில் கலந்து கொண்டார்.
அப்போது விழாக்களை சிறப்பாக செய்த அமைச்சர் முத்துசாமியை மேடையிலேயே கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து வாழ்த்து தெரிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
பின்னர் விழா முடிந்து புறப்பட்ட முதலமைச்சரின் கையில் மொடக்குறிச்சி மற்றும் கொடுமூடி தொகுதியின் ஒன்றிய செயலாளர்களை உடனே அறிவிக்க வேண்டும் என்று துண்டு சீட்டை கையில் கொடுத்து இருக்கிறார்.
அப்போது உடனே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போனை எடுத்து தலைமை நிலைய செயலாளர் ஜெயக்குமாரிடம் பேசி அவர் மொடக்குறிச்சி, கொடுமூடி ஒன்றிய செயலாளர்களின் பெயர்களை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
ராஜினாமா செய்த சுப்புலட்சுமி ஜெகதீசன்
இதனால் மனமுடைந்து போன சுப்புலட்சுமி ஜெகதீசன் தனது கட்சி பதவியை ராஜினாமா செய்து கடிதத்தை கழக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.
இந்த நிலையில் இன்று காலை அரசியலில் இருந்து ஓய்வு எடுக்க போவதாகவும் தெரிவித்துள்ளார். இவரின் அறிவிப்பு திமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.