இன்டர்நெட்டில் மலர்ந்த காதல்…வீட்டை விட்டு வெளியேறிய பள்ளி மாணவிகள் - சிக்கியது எப்படி?
இன்டர்நெட்டில் மலர்ந்த காதலால் வீட்டை விட்டு வெளியேறிய பள்ளி மாணவிகளை போலீசார் குஜராத்தில் மீட்டுள்ளனர்.
வீட்டை விட்டு ஓடிய மாணவிகள்
மராட்டிய மாநிலம் பல்ஹர் மாவட்டம் நல சொபரா பகுதியைச் சேர்ந்த 8ம் வகுப்பு பள்ளி மாணவிகள் 3 பேர் கடந்த 14ம் தேதி வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
பெற்றோர் பல இடங்களில் தேடியும் மாணவிகள் கிடைக்கவில்லை. இதையடுத்து மாணவிகளின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் மாணவிகள் குஜராத் மாநிலத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. குஜராத்திற்கு சென்ற போலீசார் வாபி நகரில் இருந்த 2 மாணவிகளையும், சூரத் நகரில் ஒரு மாணவியையும் மீட்டனர். பின்னர் அவர்களை பல்ஹர் மாவட்டத்திற்கு அழைத்து வந்தனர்.
இன்டர்நெட்டில் மலர்ந்த காதல்
அவர்களை விசாரித்த போலீசார் மாணவிகள் அளித்த வாக்குமூலத்தால் அதிர்ச்சி அடைந்தனர். மாணவிகளில் 2 பேர் ராஜஸ்தானைச் சேர்ந்த 2 இளைஞர்களை காதலித்து வந்துள்ளனர்.
இன்டர்நெட் மூலம் காதல் மலர்ந்துள்ளது. காதலனுடன் சேர வேண்டும் என்பதற்காக இருவரும் தங்கள் வீட்டை விட்டு கடந்த 14ம் தேதி வெளியேறியுள்ளனர். இவர்களுக்கு உதவி செய்வதற்காக மற்றொரு மாணவியும் வீட்டை விட்டு சென்றுள்ளார்.
மராட்டியத்தில் இருந்து மாணவிகள் 3 பேரும் ரெயில் மூலம் குஜராத் சென்றுள்ளனர்.அங்கிருந்து ராஜஸ்தான் செல்ல மாணவிகள் திட்டமிட்ட நிலையில் அவர்களை போலீசார் மீட்டுள்ளனர்.