ஹிஜாப் அணிந்து வந்த கர்நாடக மாணவர்கள் கல்லூரி வளாகத்திற்குள் அனுமதி ; தனி வகுப்பறைக்கு அனுப்பி வைப்பு
ஹிஜாப் அணிந்த கர்நாடக மாணவர்கள் தனி வகுப்பறைகளுக்கு அனுப்பப்பட்டனர், அவர்களுக்கு பாடம் எதுவும் நடத்தப்படவில்லை.
உடுப்பி மாவட்டம் குண்டாப்பூரில் உள்ள அரசு பெண்கள் பியு கல்லூரியில் கடந்த மாதம் மாணவர்களுக்கிடையே ஹிஜாப் போராட்டம் வெடித்தது.
இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சக மாணவர்கள் மற்றும் மாணவிகள் காவி துண்டும் ஷாலும் அணிந்து கல்லூரிக்கு வர தொடங்கினர்.
இதனால் கல்லூரிக்கு பர்தா அணிந்து வந்த மாணவிகள் வெளியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டதை தொடர்ந்து அந்த மாணவிகள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வந்தனர்.
இதனால் இந்த விவகாரம் இந்திய அளவில் பெரும் சர்ச்சையாக வெடித்தது.
இந்த விவகாரம் சூடு பிடிக்கவே குண்டாப்பூர் அரசு கல்லூரி அல்லாமல் மற்ற கல்லூரிகளிலும் எதிரொலித்தது.
மற்ற கல்லூரி நிர்வாகங்களும் ஹிஜாப் அணிந்து வருவதை தடை செய்தனர். மேலும் பல மாணவர்கள் காவி துண்டுகளை காட்டி மோதல் நிலையை ஏற்படுத்தினர்.
காவித் துண்டு அணிந்து வந்த மாணவர்களுக்கு ஆதரவாக, கல்லூரி மாணவிகளும் காவி ஷால் அணிந்து ஊர்வலம் சென்றனர்.
மேலும் ஹிஜாப் அணிந்து வரும் இஸ்லாமிய மாணவிகளைக் கல்லூரிக்குள் அனுமதிக்கக் கூடாது. இல்லையென்றால் நாங்கள் காவி ஷால் அணிந்து தான் கல்லூரிக்கு வருவோம் என முழக்கங்களை எழுப்பி வந்தனர்.
இந்நிலையில் குண்டாப்பூர் கல்லூரிக்கு இன்று ஹிஜாப் அணிந்து வந்த இஸ்லாமிய மாணவிகள் கல்லூரி வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு தனி வகுப்பறைகள் ஒதுக்கீடு செய்யப்படுள்ளது.
எனினும் அவர்களுக்கு வகுப்புகள் எதுவும் நடைப்பெறவில்லை என தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கல்லூரி அதிகாரிகள், "நுழைவுவாயிலின் வெளியே கூட்ட நெரிசலை தவிர்க்கவே மாணவிகள் உள்ளே வருவதை அனுமதித்தோம் " என தெரிவித்தனர்.
மாணவர்கள் ஹிஜாபை அகற்றிய பின்னரே வகுப்புகளுக்குச் செல்ல முடியும் என்று கல்லூரி முதல்வர் ராமகிருஷ்ண ஜிஜே வலியுறுத்திய போதிலும் பெண்கள் வகுப்பில் ஹிஜாபை கழற்றமாட்டோம் என்பதில் உறுதியாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.