பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை திமுக நிர்வாகி கைது - பரபரப்பு சம்பவம்
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம், வலையங்குளத்தைச் சேர்ந்தவர் வீரணன் (32). இவர் ரேடியோ செட் தொழில் பார்த்து வருகிறார். இவர் வலையங்குளம் பகுதி திமுக கிளைச் செயலாளராக இருக்கிறார்.
அதே பகுதியைச் சேர்ந்த சிறுமி அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இச்சிறுமியின் தாய் சமீபத்தில் உயிரிழந்தார். இந்நிலையில், சிறுமியிடம் வீரணன் அடிக்கடி தொடர்பு கொண்டு நட்புடன் பேசி வந்துள்ளார்.
இதனையடுத்து, சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி தனிமையில் அவரை பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்த விவகாரம் அச்சிறுமியின் தந்தைக்கு தகவல் வரவே, கடந்த 10 நாட்களுக்கு முன் மகளையும், வீரணனையும் கண்டித்துள்ளார்.
ஆனாலும், வீரணன் அப்பள்ளி சிறுமியிடம் பாலியல் சீண்டலில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார். இதனையடுத்து, அச்சிறுமியின் தந்தை நேற்று முன்தினம் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இப்புகாரை பதிவு செய்த போலீசார், வீரணனை அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது, விசாரணையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானது. இதன் பின்பு, போலீசார் வீரணனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.