Friday, Jul 18, 2025

ஒருதலை காதல்: இரயிலில் தள்ளிவிட்டு மாணவி கொலை - அதிர்ச்சியில் மாணவியின் தந்தை மரணம்

Chennai Tamil Nadu Police
By Thahir 3 years ago
Report

கல்லூரி மாணவியை ஒருதலையாக காதலித்து தொல்லை கொடுத்தவன், அவரை இரயில்முன் தள்ளிவிட்டு கொலை செய்த நிலையில், மாணவியின் தந்தை மாரடைப்பால் உயிரிழந்தார்.

சென்னையில் உள்ள கிண்டி ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராமலட்சுமி. இவர் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார்.

இவரின் குடும்பத்தினர் காவலர் குடியிருப்பில் வசித்து வருகின்றனர். ராமலட்சுமியின் மகளான கல்லூரி மாணவி சத்யா (வயது 20), நேற்று பரங்கிமலை இரயில் நிலையத்தில் இருந்து தி.நகர் கல்லூரிக்கு செல்ல வருகை தந்துள்ளார்.

ஒருதலை காதல்: இரயிலில் தள்ளிவிட்டு மாணவி கொலை - அதிர்ச்சியில் மாணவியின் தந்தை மரணம் | Student S Father Died In Shock

அப்போது, நடைமேடை எண் 1ல் மாணவியுடன் ஒருவன் நின்று பேசிக்கொண்டு இருந்த நிலையில், மெரினா கடற்கரை நோக்கி பயணம் செய்த மின்சார இரயில் வரும்போது மாணவியை இரயிலுக்குள் தள்ளிவிட்டு தப்பி சென்றான்.

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த மாம்பலம் காவல் துறையினர், சத்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து 7 தனிப்படைகள் அமைத்து விசாரணை செய்தனர். அப்போது, அதே பகுதியில் காவலராக பணியாற்றி ஓய்வுபெற்ற தயாளன் என்பவரின் மகன் சதீஷ் கல்லூரி மாணவி சத்யாவை ஒருதலையாக காதலித்து வந்தது அம்பலமானது.

கயவனின் காதலனை மாணவி ஏற்றுக்கொள்ளாத நிலையில், தொல்லைகள் தொடர்ந்ததால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு எழுதியும் வாங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மாணவிக்கு தொடர்ச்சியாக காதல் தொல்லை கொடுத்து வந்த சதீஷ், சம்பவத்தன்று மாணவியிடம் மீண்டும் காதலிக்க சொல்லி வற்புறுத்தி இருக்கிறான். அதனை ஏற்க மறுத்த மாணவி இரயில் முன் தள்ளி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் மாணவியின் உடல் நசுங்கி, தலை துண்டிக்கப்பட்டு அவர் உயிரிழந்தார். தப்பியோடிய சதீஷை தனிப்படை காவல் துறையினர் நள்ளிரவு நேரத்தில் அதிரடியாக கைது செய்தனர்.

இந்த விவகாரத்தில் மாணவியின் தாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாகி இருக்கிறார். மகளின் இறப்பு செய்தியை கேட்ட மாணவியின் தந்தை மாணிக்கமும் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரின் உடலும் காவலர்களால் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.