போராட்டம் நடத்திய மாணவர்கள மீது போலீசார் தடியடி - பரபரப்பு
மத்திய அரசின் புதிய தேசிய கல்வி கொள்கையை எதிர்த்து போராட்டம் நடத்திய மாணவர்கள், 144 தடை உத்தரவை மீறி, விதான் சவுதாவை முற்றுகையிட முயன்ற போது, போலீசார் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர்.
தேசிய கல்வி கொள்கை நாட்டிலேயே முதல் முறையாக கர்நாடகாவில் தான், கடந்த மாதம் புதிய தேசிய கல்வி கொள்கை அமல்படுத்தப்பட்டது.
இங்குள்ள, பா.ஜ., அரசு இந்த கல்வி கொள்கையை முழு அளவில் ஆதரித்து வருகிறது.இதை எதிர்த்து, 'கேம்பஸ் பிரண்ட் ஆப் இண்டியா' என்ற மாணவ அமைப்பினர், பெங்களூரு பன்னப்பா பூங்காவில் நேற்று தர்ணாவில் ஈடுபட்டனர்.
நுாற்றுக்கணக்கான மாணவ - மாணவியர் இந்த தர்ணாவில் பங்கேற்று, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
பின், விதான் சவுதா முற்றுகையிடுவதற்காக, பன்னப்பா பூங்காவிலிருந்து புறப்பட்டனர். சட்டசபை கூட்டத்தொடர் நடப்பதால், விதான் சவுதாவை சுற்றி, 2 கி.மீ.,க்கு, நான்கு பேருக்கு மேல் கூட, கூட்டங்கள் நடத்த 144 தடை உத்தரவு அமலில் உள்ளது.
விதான் சவுதா நோக்கி முன்னேறிய மாணவர்களை, மைசூரு வங்கி சதுக்கத்தில் தடுப்புகள் அமைத்து போலீசார் தடுத்தனர்.
முற்றுகைதடை உத்தரவு அமலில் இருப்பதால், விதான் சவுதா செல்ல முடியாது; திரும்பி செல்லுங்கள் என்று போலீசார் கூறினர்.இதை ஏற்க மறுத்து விதான் சவுதா முற்றுகையிட புறப்பட முயன்றனர்.
அப்போது இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.நிலைமை மோசமானதால், மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
ஆனாலும், நடுரோட்டில் அமர்ந்து போலீசாரை கண்டித்து கோஷம் எழுப்பினர்.இதனால், தர்ணாவில் ஈடுபட்ட மாணவர்களை கைது செய்து, அரசு பஸ்களில் ஏற்றி சென்றனர்.
பஸ்களில் ஏற முடியாது என மாணவர்கள் முரண்டு பிடித்தனர். ஏற்றிச் செல்லப்பட்ட மாணவர்களின் விபரம் பெற்ற போலீசார், மாலையில் அவர்களை விடுவித்தனர்.
இதனால் பெங்களூரில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.போக்குவரத்து நெரிசல் போராட்டத்தால் அவென்யூ சாலை, நிருபதுங்கா சாலை, பி.கே.ஐயங்கார் சாலை, அரண்மனை சாலை, கே.ஆர்.சாலை, அம்பேத்கார் வீதி உட்பட மைசூரு வங்கி சதுக்கத்தை சுற்றியுள்ள சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.