“எனது கல்லூரி மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நான் விரும்பவில்லை. அவர்கள் என் நண்பர்கள்“ - மாணவி முஸ்கான் பேட்டி
தன்னை பின்தொடர்ந்து வந்து ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிட்டு முற்றுகையிட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என கர்நாடகா மாநில மண்டியா கல்லூரி மாணவி முஸ்கான் கூறிள்ளார்.
கர்நாடக மாநிலம் உடுப்பியில் அரசு பியு கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் சிலர் ஹிஜாப் அணிந்து வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சக மாணவ மாணவிகள் காவி துண்டு மற்றும் ஷால் அணிந்து போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் இந்திய அளவில் பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள மற்ற கல்லூரிகளிலும் இந்த விவகாரம் எதிரொலிக்க தொடங்கி போராட்டங்கள் வெடிக்க ஆரம்பித்தது.
இந்நிலையில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மாநிலத்தின் சில பகுதிகளில் உள்ள ஜூனியர் கல்லூரிகளில் ஹிஜாப் அணிவதற்கு விதிக்கப்பட்ட தடை தொடர்பான விசாரணை நேற்று காலை தொடங்கி நடைபெற்று வந்தது.
மேலும், இந்த வழக்கு விசாரனை இன்று பிற்பகல் 2.30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஒரு சில இடங்களில் கல்வி நிலையங்களில் கல்வீச்சு சம்பவங்களும் ஏற்பட்டதால் மேலும் எந்த அசம்பாவிதங்களும் எற்படாமல் இருக்க
இன்று முதல் 3 நாட்களுக்கு கர்நாடகாவில் உள்ள அனைத்து உயர்நிலைப் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டார் மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை.
இந்த நிலையில் கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் பர்தா அணிந்து வந்த முஸ்கான் என்ற மாணவி ஒருவர் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே நுழைய முற்பட்டப்போது
அந்த மாணவியை முற்றுகையிட்டு சக மாணவர்கள் பின்தொடர்ந்து போய் ஜெய்ஸ்ரீராம் என கோஷமிட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
அத்தனை மாணவர்களுக்கு மத்தியில் தனி ஆளாக போராடிய மாணவி பதிலுக்கு அல்லாஹு அக்பர் என ஆக்ரோஷமாக கோஷம் எழுப்பினார்.
இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த கல்லூரி முதல்வரும் கல்லூரி ஊழியர்களும் மாணவி முஸ்கானை பத்திரமாக அழைத்து சென்றனர்.
#KarnatakaHijabRow when a #hijabi student arrives at PES college in #Mandya. She gets heckled by students wearing #saffronshawls chanting #JaiSriRam. She raises her hand says "#AllahuAkbar befor being escorted by college staff. Video courtesy: Digvijaya News. #Karnataka pic.twitter.com/l17IL095Bv
— Imran Khan (@KeypadGuerilla) February 8, 2022
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து மாணவிக்கு ஆதரவு பெருகி வருகிறது.
இந்த நிலையில் இது குறித்து பேசியிருக்கும் மாணவி முஸ்கான்,
“நான் இதற்கு முன்பும் பர்தா அணிந்துகொண்டு தான் கல்லூரிக்கு வருவேன், ஆனால் வகுப்பறைக்கு செல்லும்போது மட்டும் பர்தாவை கழட்டிவிட்டு ஹிஜாப் மட்டும் அணிந்து செல்வேன்.
அப்போது என்னை யாரும் எதுவும் சொன்னதில்ல, நேற்றிலிருந்து தான் இந்த பிரச்சினை தொடங்கியது.
என்னை பின்தொடர்ந்து முழக்கமிட்டவர்களில் 10 சதவித பேர் தான் எனது கல்லூரியை சேர்ந்தவர்கள் மற்றவர்கள் வெளியாட்கள்”, என கூறினார்.
மேலும், “அந்த சமயத்தில் எனது கல்லூரி முதல்வரும் ஆசிரியர்களும் எனக்கு உறுதுணையாக இருந்து என்னை பாதுகாப்பாக நடத்தினர்” என தெரிவித்துள்ளார்.
பர்தா அணிந்து வந்த முஸ்லீம் மாணவியை முற்றுகையிட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
ஆனால் அந்த மாணவியோ எனது கல்லூரி மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நான் விரும்பவில்லை. அவர்கள் என் நண்பர்கள். இனி அவர்கள் இது போல் நடந்து கொள்ள மாட்டார்கள் என நம்புகிறேன் என்றார்.