படிக்கும் போதே திருமணம் செய்து வைத்ததால் மாணவி விஷம் குடித்து தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்
திருவாரூர் மாவட்டம், திருக்கரவாசல் கிராமத்தை சேர்ந்த பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவியை கடந்த 2017ம் ஆண்டு விழுப்புரம் ஆண்டி குப்பத்தை சேர்ந்த சிவகுமார் என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாததால், திருமணம் முடிந்த 3 நாட்களில் மாணவி சொந்த ஊருக்கு திரும்பி வந்துவிட்டார்.
இந்நிலையில், மாணவியின் குடும்பத்தார் வரதட்சணையை சிவகுமார் குடும்பத்தாரிடம் திருப்பி கேட்டனர். இதன் காரணமாக பிரச்சனை ஏற்பட்டது.
இதனால், மனமுடைந்த மாணவி கடந்த 4ம் தேதி குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதைப் பார்த்த உறவினர்கள் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று மாணவியின் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில், உடனடியாக மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாணவி அனுப்பி வைக்கப்பட்டார். தற்பொழுது மாணவி சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.
இதனையடுத்து திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் மற்றும் விழுப்புரம் காவல் நிலையத்தில் மாணவியின் சித்தப்பா ஏழுமலை மட்டும் மாணவியின் பெற்றோர், சிவகுமாரின் பெற்றோர் உள்ளிட்டோர் மீது குழந்தை திருமண தடை சட்டம் மற்றும் போஸ்கோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிவகுமார் விழுப்புரம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். மேலும் குழந்தை திருமணத்தால் மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளது திருக்கரவாசல் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.