3-வது மாடியிலிருந்து மாணவி குதித்து தற்கொலை - பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் தள்ளுமுள்ளு - கள்ளக்குறிச்சியில் பதற்றம்
மாணவி தற்கொலை?
கடலூர் மாவட்டம், பெரியநெசலூரைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவருடைய மகள் ஸ்ரீமதி (16), இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கணியாமூரில் உள்ள ஒரு தனியார் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை மாணவி ஸ்ரீமதி விடுதியின் 3-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது. இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
பிரேத பரிசோதனை தகவல்
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இறந்த மாணவியின் உடல் பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மாணவி மாணவி ஸ்ரீமதி இறப்பதற்கு முன் அவரது உடலில் பல காயங்கள் உள்ளதாகவும், மாணவியின் உடைகளில் ரத்த கறைகள் இருந்தன என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதனையடுத்து, மாணவியின் இதயம் உள்ளிட்ட 5 உறுப்புகள், தடயவியல் துறை ஆய்விற்காக அனுப்பப்பட்டுள்ளன. என் மகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை, கற்பழித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் அல்லது நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் மாணவியின் ஸ்ரீமதியின் தாயார் குற்றம் சாட்டி இருக்கிறார்.
தள்ளுமுள்ளு
இது குறித்து, பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்றும் மாணவியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கள்ளக்குறிச்சியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேரணியாக செல்ல முயன்ற அவர்களை போலீசார் தடுப்புகள் அமைத்து தடுத்து நிறுத்தினர். அப்போது இருதரப்பினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அப்பகுதியில் போர்க்களம்போல் காட்சியளித்தது.