ஆன்லைன் சூதாட்டம்: தடை விதிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் - மத்திய அமைச்சர்
ஆன்லைன் சூதாட்டங்கள் தொடர்பாக சட்டம் இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருப்பதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் சூதாட்டம்
சேலம், நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.ஆர்.பார்த்திபன், மன உளைச்சலை அதிகரிக்கும் ஆன்லைன் விளையாட்டுகளை நெறிமுறைப்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பினார்.
இதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ள மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், " அரசியலமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையில் இரண்டாவது பட்டியலில் (மாநிலப் பட்டியல்) 34-ஆவதாக ‘‘பந்தயம் கட்டுதல் மற்றும் சூதாடுதல்’’ இடம் பெற்றுள்ளது. இதில், மாநில அரசுகள் சட்டமியற்றும் அதிகாரம் உண்டு.
அதிகாரம் யாருக்கு?
அதற்கேற்ப, இணைய வழியில் கிடைக்கும் சூதாட்டங்களுக்கும் பல்வேறு மாநில அரசுகள் சட்டமியற்றி தடை விதித்துள்ளன. திறன் சார்ந்த விளையாட்டுக்கும், அதிர்ஷ்டத்தை சார்ந்த விளையாட்டுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் தொடர்பாக பல்வேறு நீதிமன்ற அறிவிப்புகள் உள்ளன.
ஒரு குறிப்பிட்ட கணிசமான அறிவைக் கொண்டு வெற்றி பெற முடியும் விளையாட்டுகள் எல்லாம் திறன் சார்ந்த விளையாட்டு என்று இந்திய உச்சநீதிமன்றம் குறிப்பிடுகிறது. அதிர்ஷ்டத்தை சார்ந்த விளையாட்டுகள் அனைத்தும் இந்திய சட்டத்தின் படி சூதாடுதலாக கொள்ளப்படும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய மாநில அரசுகளுக்கு முழுமையான அதிகாரம் இல்லை என்று காரணத்தினால் ஆளுநர் மசோதாவை திருப்பி அனுப்பியதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.