14 வருடங்கள் தண்டனை பெற்ற கைதிகளை மாநில அரசு விடுவிக்கலாம்! பேரறிவாளன் விடுதலை எப்போது?
14 ஆண்டு கால தண்டனையைப் பூா்த்தி செய்த கைதிகளை சட்டத்தின்படி விடுவிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதே சமயம் மாநில அமைச்சரவையின் அறிவுறுத்தலின் பேரில் மட்டுமே ஆளுநர் விடுவிக்கலாம் எனவும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் ஆயுள் தண்டனை கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்கப்படுகின்றனர்.
தண்டனைக் கைதிகளை முன்கூட்டியே விடுவிப்பது குறித்து மாநில ஆளுநரிடம் ஆலோசிக்கத் தேவையில்லை என ஹரியானா அரசு கடந்த 2008-ஆம் ஆண்டு கொண்டுவந்த கொள்கை திட்டத்தை எதிர்த்து வழக்குகள் தொடுக்கப்பட்டன.

இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தைப் பின்பற்றி, ஹரியானா அரசு தண்டனைக் கைதிகளை விடுவிக்கலாம் என்று உத்தரவிட்டிருந்தது.
இதற்கு எதிரான மேல்முறையீட்டு மனு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. அதில், 433 - ஏ பிரிவு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் வரும் வழக்குகளில், 14 ஆண்டு கால தண்டனையை பூர்த்தி செய்த கைதிகளை விடுவிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என நீதிபதிகள் தெரிவித்தனர்.
அதே சமயம், 14 ஆண்டுகள் சிறைவாசம் முடியாத கைதிகளை முன்கூட்டியே விடுவிக்க ஆளுநருக்கு தான் அதிகாரம் உள்ளது என்றும், இதில் மாநில அரசின் ஆலோசனைபடி செயல்பட வேண்டும் எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இரண்டு 14 ஆண்டுகாலமாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது.