உயிருக்கு பயந்து பாஜகவில் இருந்து விலகிய முக்கிய நிர்வாகி - காரணம் என்ன?
உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி தமிழ்நாடு பாஜகவின் பொருளாதாரப் பரிவு மாநில செயலாளர் கிருஷ்ண பிரபு தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
எந்த காலத்திலும் கட்சி வளராது
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொருளாதாரப் பிரிவின் மாநிலச் செயலாளராக இருந்து வருகிறேன்.
கட்சியின் அடிப்படை உறுப்பினராக இருக்கக்கூடத் தகுதி இல்லாத சிலரை, நீங்களும் (அண்ணாமலை) கேசவ விநாயகமும் பொறுப்பில் அமர்த்தி அழகு பார்ப்பதாலும் கட்சியில் நீங்கள் சொல்வதைப் போல கட்சி உறுப்பினர்களிடமும் நிர்வாகிகளிடமும் அவசியமில்லாத விஷயங்களுக்கு பணம் கேட்டு தொந்தரவு செய்வதால் எந்த காலத்திலும் கட்சி வளராது.
அதற்கும் மேல் நேர்மாறாக இங்கே அவர்களது சுய லாபத்திற்காகவும் மதச்சார்பற்ற கட்சி என்று சொல்லிக்கொண்டு, தமிழ்நாட்டுக்குள் பலவிதமான சச்சரவுகளையும் மேலும் எங்களிடமிருந்தும் தொண்டர்கள், நிர்வாகிகளிடமிருந்தும் பணம் வசூலிக்கச் சொல்லியும் மேலும் பணத்தைப் பெற்றுக் கொண்டும் பல விதமான அரசியல்களை நடத்திக் கொண்டிருக்கிறீர்கள்.
நீங்கள் எங்களை ஜனநாயகத்துக்கு எதிராக வற்புறுத்தி சில விஷயங்களையும் கோரிக்கைகளையும் செய்யச் சொல்வதாலும், என்னைப் போன்ற நிர்வாகிகளும் தொண்டர்களும், கட்சிக்கும் உங்களுக்கும் உண்மையாக வேலை பார்த்த நிர்மல் குமார் போன்ற நிர்வாகிகளையும் பல இன்னல்களுக்கு ஆளாக்கி, எந்த ஒரு கட்சி வேலையும் செய்யவிடாமல் செய்தனர்.
மேலும் ஆருத்ரா போன்ற மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மாநிலத் தலைமைக்கு நெருக்கமாக இருந்து வருகிறது. இதைக் கண்டும் காணாமல் இருப்பதற்கு எனது மனம் கொள்ளவில்லை.
ராஜினாமா செய்கிறேன்
இந்தக் கட்சி என்னையும் என் குடும்பத்தாரையும் பழுது பார்த்து விட்டது. மேலும் இந்த பொருளாதாரப் பிரிவின் பிரச்சனைகளை நேரடியாக உங்களுக்கும் கட்சி அலுவலகத்துக்கும் சொல்லியும் இதுவரை நீங்கள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதால் நான் எனது பொருளாதாரப் பிரிவின் மாநிலச் செயலாளர் பொறுப்பை ராஜினாமா செய்கிறேன்.
இதற்கு முழுக் காரணமாக இருக்கும் பொருளாதாரப் பிரிவின் மாநிலத் தலைவர் எம்.எஸ்.ஷா, மதுரை மாவட்டத் தலைவர் மகா சுசீந்திரன், நரசிங்க பெருமாள் இவர்கள் எல்லாரையும் வழி நடத்தும் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகிய நீங்கள்தான்.
நீங்கள் சரியாகச் செயல்படவில்லை என்று குறிப்பிடுகிறேன். பணம் உள்ளவர்களுக்கு மட்டும்தான் இந்தக் கட்சியில் பொறுப்பு வழங்கப்படுகிறது என்பது ஊர்ஜிதமான உண்மை.
இதற்கு பலவிதமான ஆதாரங்கள் உள்ளன. இதற்கும் மேல் பாரதிய ஜனதா கட்சியில் என்னை அர்ப்பணித்தேன் என்றால் எனது உயிருக்கே பல பாதிப்பு வரும் என்று நினைத்து இந்தக் கட்சியில் இருந்து நான் நிரந்தரமாக ராஜினாமா செய்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.