பகத் சிங்கின் சொந்த ஊரில் பஞ்சாப் முதலமைச்சராக பகவந்த் மன் பதவியேற்பு - குவியும் வாழ்த்துக்கள்
கடந்த மாதம் 20-ம் தேதி பஞ்சாப் மாநிலத்தில் 117 சட்டமன்ற தொகுதிகளுக்கும், 40 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கோவாவில் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. அதேபோல், உத்தரபிரதேசத்தில் 403 சட்டமன்ற தொகுதிகளில் 7 கட்டங்களாக தேர்தல் நடந்தது.
உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப் ,கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை நடைபெற்றது.
இத்தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக பக்வந்த் மன் அமோக வெற்றி பெற்றார்.
இந்நிலையில், பகத் சிங்கின் சொந்த ஊரான கத்கட் கலானில், பஞ்சாப் மாநில 17-வது முதலமைச்சராக பகவந்த் மன் பதவியேற்றார். ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
நகைச்சுவை நடிகராக தனது வாழ்க்கைப் பயணத்தை தொடங்கிய பகவந்த் மன், கடின உழைப்பால் இன்று பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார்.
கடந்த 2011ம் ஆண்டு பஞ்சாப் மக்கள் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட இவர், 2012ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டார் . அதில் பகவந்த் மன் தோல்வி அடைந்தார்.
இதனையடுத்து, 2014ம் ஆண்டு பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்தார். கட்சியில் சேர்ந்து உடனே, இவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கிடைத்தது.
2014ம் ஆண்டு துரி தொகுதியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார் . 2019ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற பகவந்த் மன் தற்போது பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளார்.