நாய்கடிக்கு இழப்பீடு வழங்குக; ஒரு பல்கடிக்கே அவ்வளவு ரூபாயா..? - நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
நாய்கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டியது மாநில அரசின் பொறுப்பு என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தெருநாய் தாக்குதல்
கடந்த மாதம் `Wagh Bakri Tea' குழுமத்தின் நிர்வாக இயக்குநர் பராக் தேசாய் (49) தெருநாய் தாக்குதலுக்கு ஆளாகி, மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக பலியானார். இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது.
இதே போல் இந்தியாவில் பல இடங்களில் மக்கள் தெருநாய் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். இதில் அதிகமாக பாதிக்கப்படுவது சிறுவர்கள்தான். இந்நிலையில் பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்றத்தில், தெருநாய்களால் மக்கள் தாக்குதலுக்குள்ளாவது தொடர்பாக 193 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம் "தெருநாய்கள், கால்நடைகள் போன்ற விலங்குகளால் தாக்கப்பட்ட வழக்குகளில், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு, மாநில அரசு முதன்மையாகப் பொறுப்பேற்க வேண்டும்.
உயர்நீதிமன்றம் உத்தரவு
வளர்ப்புப் பிராணிகளின் உரிமையாளர்கள், தங்களின் நாய்கள் உள்ளிட்ட பிராணிகள் பிறரைக் கடித்துவிட்டால், ஒரு பல் குறிக்குக் குறைந்தபட்சம் ரூ.10,000-மும், கடித்ததால் ஏற்படும் 0.2 செ.மீ காயத்துக்குக் குறைந்தபட்சம் ரூ.20,000-மும் வழங்க வேண்டும். பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் யூனியன் பிரதேசம் ஆகியவற்றுக்கு, இது தொடர்பான தீர்வுகளுக்கு ஒரு குழுவை அமைக்க வேண்டும்.
அந்தக் குழு பசுக்கள், காளைகள், எருதுகள், கழுதைகள், நாய்கள், எருமைகள் போன்ற விலங்குகள் மற்றும் செல்லப்பிராணிகளால் ஏற்படும் விபத்துகள் அல்லது தாக்குதல்களில், பாதிக்கப்படுவோருக்கு வழங்கப்படவேண்டிய இழப்பீடு குறித்து முடிவுசெய்யும். சாலைகளில் சுற்றித்திரியும் விலங்குகளுக்கு தனிநபர்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளின் பங்கேற்பின் மூலம், கருத்தடை மற்றும் நோய்த்தடுப்பு ஊசி போடப்பட வேண்டும்.
போதிய நிதி மற்றும் மனிதவளம் இல்லாததால், இத்தகைய நடவடிக்கைகள் அடிக்கடி முடங்கிவிடுகின்றன. ஆனால், இது பேராபத்துக்கு வழிவகுத்துவிடும் என்பதை நாம் கவனத்தில்கொள்ள வேண்டும்" என்று தெரிவித்துள்ளது.