புதிய கட்சி தொடங்குகிறாரா ? குலாம் நபி ஆசாத்
காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவராக இருந்த குலாம் நபி ஆசாத் அக்கட்சியில் இருந்து விலகிய நிலையில் தற்போது புதிய கட்சியை தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குலாம் நபி ஆசாத் குற்றச்சாட்டு
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான குலாம் நபி ஆசாத் 1970 களில் காஷ்மீர் முதலமைச்சர், மத்திய அமைச்சர் , மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் எனப் பல முக்கிய பொறுப்புகளை வகித்து வந்தவர்.
காங்கிரஸ் கட்சியில் பயணித்து வந்த குலாம் நபி ஆசாத் தற்போது அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இந்த விவகாரம் காங்கிரஸ் கட்சியிடையினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு ராகுல் காந்தியின் குழந்தைத்தனமான நடவடிக்கையே காரணம் என்றும் குறிப்பாக கட்சியில் கலந்து ஆலோசனை செய்வது முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.
புதிய கட்சி தொடங்குகிறாரா?
ஏற்கனவே குலாம் நபி ஆசாத் ஜம்மு - காஷ்மீரில் முதலமைச்சராக பதவி வகித்துள்ளார் என்பதால் அவர் புதிய கட்சியை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தனியார் செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், "நான் ஜம்மு மற்றும் காஷ்மீருக்குச் செல்வேன். மாநிலத்தில் எனது சொந்தக் கட்சியை தொடங்குவேன், தேசிய அளவில் அது சாத்தியமா என்பதை பின்னர் சரிபார்க்கிறேன்" என கூறினார்.
ஜம்மு காஷ்மீரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் குலாம் நபி அசாத் சொந்த கட்சியை துவங்கி தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.