தமிழகத்தில் இரவு ஊரடங்கு அமல் - சென்னையில் 10 ஆயிரம் போலீசார் கண்காணிப்பு
கொரோனா பரவலை தடுப்பதை முன்னிட்டு தமிழகத்தில் இரவு ஊரடங்கு அமலானது.
கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் கொரோனா பரவல் தீவிரத்தை கட்டுப்படுத்தும் முயற்சியாக இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படும் (இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை) என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் அறிவித்தார்.
இதனை முன்னிட்டு பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் மீண்டும் இரவு நேர ஊரடங்கு நேற்று முதல் அமலானது. சாலைகள், மேம்பாலங்கள் தடுப்பு வைத்து அடைக்கப்பட்டன. சென்னையில் 10 ஆயிரம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இரவு நேர ஊரடங்கையொட்டி கடைகள் அனைத்தும் நேற்று இரவு 9.30 மணிக்குள்ளாகவே மூடப்பட்டன. இதனால் இரவு 10 மணிக்கே நள்ளிரவு நேர அமைதியை காணமுடிந்தது. சாலையோர கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் இரவு நேரங்களில் திருவிழாக்கள் போல காட்சியளிக்கும் கடைவீதிகள் வெறிச்சோடி காட்சி தந்தன. சாலைகளில் ஆங்காங்கே நடமாடும் டீக்கடைகளும் இரவில் காணவில்லை.
இரவு ஊரடங்கையொட்டி, நகரை சுற்றிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அந்தவகையில் சென்னையில் 312 இடங்களில் தடுப்புகள் அமைத்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையிலும் ஈடுபட்டனர்.