“மாநிலம் மற்றும் மொழி உரிமையை காக்க கண்ணும் கருத்துமாக பாடுபடுவோம்” - திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
டெல்லியில் நடைபெற்ற பாரளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37 வது கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தி மொழியானது மத்திய அமைச்சரவையின் 70 சதவீத நிகழ்ச்சி பற்றிய தொகுப்புகள் எல்லாம் இந்தி மொழியில் உருவாக்கப்படுள்ளது என்றும்
ஆங்கிலத்திற்கு மாற்று மொழியாக மாநிலங்கள் இந்தி மொழியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மாநில மொழிகள் பற்றிய உரிமை குறித்து பல்வேறு நபர்களும் மத்திய அரசுக்கு எதிராக தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மாநில உரிமை மற்றும் மொழி உரிமையை காக்க தொடர்ந்து பாடுபடுவோம் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து திமுக தொண்டர்களுக்கு அக்கட்சித் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில்,
“மாநில உரிமை, மொழி உரிமை காக்க கண்ணும் கருத்துமாக திமுகவினர் தொடர்ந்து பாடுபடுவோம். தமிழ்நாட்டை வளர்த்தெடுப்போம், அதன் தாக்கத்தை பிற மாநிலங்களிலும் ஏற்படுத்துவோம்.
இந்திய ஒன்றியத்தில் எவராலும் தவிர்க்க முடியாத இயக்கம் திமுக என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிப்போம். தமிழ் மொழி, தமிழ் மக்கள், தமிழ்நாடு ஆகிய மூன்றின் வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு திமுக பயணிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.