மக்கள் அதிருப்தி அதிகரித்துள்ளது: தவெக அரசு மீது ஸ்டாலின் கடும் விமர்சனம்!
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் அக்கட்சியின் மகளிரணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார்.
கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், தற்போது எதிர்க்கட்சியாக உள்ள திமுக மீண்டும் ஆளும் கட்சியாக மாற வேண்டுமெனில் மேலும் வேகமாகவும் சுறுசுறுப்பாகவும் செயல்பட வேண்டும் என்றார். அதற்கான களமாகவே இந்த ஆலோசனைக் கூட்டம் அமைகிறது என்றும் குறிப்பிட்டார்.

மேலும், தற்போதைய அரசை ஆறு மாதங்கள் விமர்சிக்காமல் இருப்பேன் என்று ஏற்கனவே தெரிவித்திருந்ததாகவும், ஆனால் அதனை சிலர் தவறாகப் புரிந்துகொண்டு ஆட்சியை கவிழ்க்கும் சதி என விமர்சித்து வருவதாகவும் கூறினார்.
தவெக குறித்து ஸ்டாலின்...
தேர்தல் தோல்விக்கான காரணங்களை திமுக தீவிரமாக ஆய்வு செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக திமுக செயல்படும் என்றும், அரசின் குறைபாடுகள் மற்றும் தோல்விகளை தொடர்ந்து சுட்டிக்காட்டும் என்றும் மு.க.ஸ்டாலின் கூறினார்.
மேலும், இனி எப்போது தேர்தல் வந்தாலும் தற்போதைய ஆட்சியை மக்கள் நிராகரிப்பார்கள் என்ற சூழல் உருவாகியுள்ளதாகவும் அவர் விமர்சித்தார்.
திமுக ஆட்சிக் காலத்தில் ‘விடியல் பயணம்’, ‘மகளிர் உரிமைத் தொகை’, ‘புதுமைப் பெண்’ உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதாக அவர் நினைவுகூர்ந்தார்.

இந்தத் தேர்தலிலும் ரூ.8,000 கூப்பன் திட்டம் மற்றும் உரிமைத் தொகை உள்ளிட்ட பல வாக்குறுதிகள் வழங்கப்பட்டதாகவும், குறிப்பாக பெண்களின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
ஆனால் தற்போது சமூக வலைதளங்களைப் பார்க்கும்போது குற்றச்சம்பவங்கள், சென்னையில் மின்வெட்டு, சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் போன்றவை குறித்து மக்கள் அதிருப்தி தெரிவித்து வருவதாக கூறினார். “ஏன் இவர்களுக்கு வாக்களித்தோம்?” என்று மக்கள் கேள்வி எழுப்பும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கொடூரமான குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், அதனை தினமும் ஊடகங்களில் பார்க்க நேரிடுவதாகவும் தெரிவித்தார். “தவெக ஆட்சியில் பாதுகாப்பு இருக்கும் என்று கூறினார்கள். ஆனால் தற்போது தவெக ஆட்சியிலிருந்தே மக்களுக்கு பாதுகாப்பு தேவைப்படும் நிலை உருவாகியுள்ளது” என மு.க.ஸ்டாலின் விமர்சித்தார்.

மேலும், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை தங்களது பக்கம் இழுக்கும் முயற்சியில் விஜய் ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டிய அவர், “ஆட்சியை காப்பாற்ற அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை நாடும் நிலை ஏற்பட்டுள்ளது.
தனது ஆட்சியின் மீது அவருக்கே நம்பிக்கை இல்லையா?” என்று கேள்வி எழுப்பினார். தற்போதைய அரசுக்கு ஆதரவு அளித்த கட்சிகளும் மறுபரிசீலனை செய்யும் நிலையில் இருப்பதாகவும் கூறினார்.
டெல்லியில் பாஜக மேற்கொண்டு வரும் அரசியல் நடவடிக்கைகளைப் போலவே தமிழகத்திலும் தவெக அரசு செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டிய அவர், தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த உடனேயே, வாக்களித்த மக்களின் நம்பிக்கையை மீறும் வகையில் எதிர்க்கட்சியிலிருந்து உறுப்பினர்களை தங்கள் கட்சியில் இணைத்துக்கொள்வது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றார்.
“தேர்தலில் வாக்களித்தபோது விரலில் வைத்த மை காயும் முன்பே அதிமுகவில் இருந்து ராஜினாமா செய்து தவெகவில் இணைவது ஜனநாயக மரபுகளுக்கு எதிரானது. இதுகுறித்து அனைத்து ஜனநாயக சக்திகளும் நியாயமான கேள்விகளை எழுப்ப வேண்டும்” என்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.