தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கவே துபாய் சென்றேன் - சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கவே துபாய் சென்றேன் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் மானியக் கோரிக்கை விவாதங்களுடன் இன்று காலை 10 மணியளவில் தொடங்கியது. முதல் நாளான இன்று நீர்வளத் துறை மீதான மானியக் கோரிக்கை நடைபெற்றது.
இந்நிலையில், சமீபத்தில் துபாயில் நடந்த உலக கண்காட்சியில் இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்பட 192 நாடுகள் பங்கேற்றன.
தமிழ்நாடு சார்பாக கைத்தறி, விவசாயம், சிறுதொழில், பெருந்தொழில் தொடங்க அழைப்பு விடுக்கும் வகையில் ‘தமிழ்நாடு தளம்' என்ற அரங்கம் அமைக்கப்பட்டிருந்தது.
இந்த அரங்கினை திறந்து வைப்பதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு முறை பயணமாக கடந்த மார்ச் 25-ந் தேதி துபாய் சென்றார்.
இந்த பயணம் குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்த நிலையில் ,தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கவே துபாய் சென்றேன் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இன்றைய தமிழக சட்டசபையில் தனது துபாய் பயணம் குறித்து பேசிய முதலமைச்சர்,
“தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கவே துபாய்க்கு அரசு முறை பயணம் சென்றேன் .துபாய், அபுதாபி பயணத்தில் 14 ஒப்பந்தங்கள் மூலம் ரூ 6,100 கோடி முதலீடு ஈர்ப்பு, 12,100 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
பல்வேறு மாவட்டங்களில் புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது
துபாயில் உள்ள தமிழர்களை சந்தித்து, சொந்த மண்ணில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்தேன்.” என தெரிவித்தார்.