ஸ்டாலின் இன்று நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு
தமிழக முதல்வர் பழனிசாமி குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் இன்று ஸ்டாலின் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே வைரவன்பட்டியில் திமுக சார்பில் நடைபெற்ற 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய திமுக தலைவர் முக ஸ்டாலின், தமிழக முதல்வர் குறித்து அவதூறாக பேசியதாக அதிமுக சார்பில் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. தொடர்ந்து சிவகங்கை மாவட்ட நீதிமன்றத்தில் முதன்மை மாவட்ட குற்றவியல் அரசு வழக்கறிஞர் வழக்குப்பதிவு செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி சுமதிசாய் பிரியா முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, இன்று மு.க.ஸ்டாலின் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு பிறப்பித்துள்ளார்.