தமிழகத்தில் ஆட்சி அமைக்க திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு ஆளுநர் முறைப்படி அழைப்பு
தமிழகத்தில் புதிய ஆட்சியமைக்க, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் முறைப்படி அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழக சட்டசபைத் தோதலில், திமுக கூட்டணி 159 தொகுதிகளைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. திமுக மட்டும் தனித்து 125 தொகுதிகளைக் கைப்பற்றியது. இதையடுத்து தமிழக முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொறுப் பேற்க இருக்கிறார்.
முன்னதாக, நேற்று நடந்த திமுக சட்டசபை உறுப்பினா்கள் கூட்டத்தில் சட்டசபைக் குழுத் தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து ஆளுநா் பன்வாரிலால் புரோகித்தை இன்று சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். திமுக உறுப்பினா்கள் மற்றும் உதயசூரியன் சின்னத்தில் போட்டி யிட்டு வெற்றி பெற்ற 8 உறுப்பினா்கள் என 133 உறுப்பினர்களின் கடிதத்தையும் ஆளுநரிடம் அளித்தார்.
இந்நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முறைப்படி திமுக தலைவர் ஸ்டாலினை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்துள்ளார். பதவியேற்பு விழா கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் நாளை மறுநாள் (மே 7-ஆம் தேதி) எளிமையாக நடைபெறும் எனக் கூறப்படுகிறது.