ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிக்கிறோம்.. நீட் தேர்வு விவகாரம் - ஸ்டாலின் அதிரடி

M K Stalin DMK Governor of Tamil Nadu
By Karthick Aug 14, 2023 09:42 AM GMT
Report

நாளை சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஆளுநர் மாளிகையில் நடத்தப்படும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நீட் விவகாரம்

தமிழகத்தில் நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என கோரிக்கை வைத்து தமிழக அரசு சட்டமன்றத்தில் இயற்றிய மசோதாவிற்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் தாமதித்து வருகிறார். சில தினங்கள் முன்பு இது குறித்து பேசிய ஆளுநர், தான் ஒரு போதும் நீட் விலக்கு மசோதாவில் கையெழுத்திட மாட்டேன் என அதிரடியாக கூறியிருந்தார்.

stalin-boycots-governor-tea-party

ஆளுநரின் இந்த கருத்திற்கு பலதரப்பட்ட அரசியல் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில்,இன்று சென்னை குரோம்பேட்டையில் நீட் தேர்வினால் தந்தை மகன் இருவரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், நாளை சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டியில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்திற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது.

முக ஸ்டாலின் அறிக்கை  

இந்த விருந்தை புறக்கணிப்பதாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டின் 77 ஆவது விடுதலை நாளைக் கொண்டாடும் நேரத்தில், சில நாட்களுக்கு முன் சென்னையைச் சேர்ந்த 17 வயது மாணவர் ஜெகதீஸ்வரன் மற்றும் அவரது தந்தை செல்வசேகர் ஆகிய இருவரும் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்ட செய்தி, நம் முன்னோர் தம் இன்னுயிர் ஈந்து நமக்களித்த விடுதலை, எல்லோருக்குமானதா அல்லது வசதி படைத்த வெகு சிலருக்கானதா? என்ற கேள்வியை எழுப்புகிறது.

stalin-boycots-governor-tea-party

அரியலூர் அனிதாவில் தொடங்கி இதுவரை விலைமதிப்பில்லா பல மாணவச் செல்வங்களின் உயிர்களை, நீட் தேர்வு முறை காரணமாக தமிழ்நாட்டில் நாம் இழந்திருக்கிறோம். இவர்களின் மரணங்கள் எழுப்பும் தார்மிகக் கேள்விகள், நமது மனச்சாட்சியை உலுக்கி வருகிறது. 

கொச்சைப்படுத்திய ஆளுநர்

ஆனால், ஏழை எளிய, நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர், அவர்தம் பெற்றோரின் கனவுகளை, எதிர்கால நல்வாய்ப்புகளை இழந்து வரும் நிலையை உணர மறுத்து, தமிழ்நாட்டு ஆளுநர் இரக்கமற்ற வகையில் பேசி வருகிறார். 'நீட் தேர்வு விலக்குக்கு நான் ஒருபோதும் அனுமதி அளிக்க மாட்டேன். அந்த அதிகாரம் எனக்கு இருந்தால் நிச்சயம் நீட் விலக்கு மசோதாவில் கையெழுத்திட மாட்டேன்' என்று பொதுவெளியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருப்பது தமிழக மாணவர்களையும், இளைஞர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஏழு ஆண்டுகளாக தமிழகத்தில் நடந்து வரும் நீட் எதிர்ப்புப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் ஆளுநர் பொறுப்பில் இருப்பவர் பொறுப்பின்றிப் பேசுகிறார்.

stalin-boycots-governor-tea-party

தமிழ் மக்களைப் பற்றி அக்கறையுள்ளோர், தமிழர் உயிர் துறப்பதைக் கண்டு கலங்குவர். ஆனால், ஆளுநர் ரவியின் செயல்பாடுகள், ‘அதைப்பற்றி எனக்கு அக்கறை இல்லை’ என்பது போல உள்ளது. இந்த நிலை மாறவே, நீட் தேர்வுக்கு விலக்கு கோரி, சட்டம் இயற்றி, தமிழ்நாடு அரசு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்துள்ளது. குடியரசுத் தலைவர் இதற்கு ஒப்புதல் வழங்கக் கோரி, இன்று (ஆக.14) கடிதம் அனுப்புகிறேன். 

தேனீர் விருந்தை புறக்கணிக்கிறோம் 

ஆளுநர் அரசியல் ரீதியாக திராவிடம், ஆரியம், திமுக, திருவள்ளுவர், வள்ளலார், சனாதனம் பற்றிப் பேசி வருவதை நாங்கள் மதிக்கவில்லை. அது கபட வேடம் என்பதை அறிந்தே இருக்கிறோம்; ஆரியப் புலம்பலாக ஒதுக்கித் தள்ளுகிறோம். ஆனால், ஏழை எளிய, விளிம்பு நிலை அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவை அப்படித்தான் சிதைப்பேன் என்று நியமனப் பதவியில் இருக்கும் ஓர் ஆளுநர் கொக்கரிப்பார் என்றால், இது கல்வித் துறை மீது நடத்தப்படும் சதியாகவே கருதுகிறோம்.

stalin-boycots-governor-tea-party

தமிழக மாணவர்களின் எதிர்காலம் எங்களுக்கு முக்கியமானது. நாங்கள் இந்த மாநிலத்திற்கு, இந்த ஆண்டு வந்து, அடுத்த ஆண்டு செல்பவர்கள் அல்ல. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தமிழ் மக்களுக்காக என்றென்றும் உரிமைக் குரலை எழுப்பும் ஒரே கட்சி திமுகதான்.

பல்கலைக் கழகங்களைச் சிதைத்தும் - உயர் கல்வித் துறையைக் குழப்பியும், தமிழக சட்டமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகள் நிறைவேற்றி அனுப்பிய சட்டமுன்வடிவுகளுக்கு அனுமதி தராமலும், இதன் உச்சமாக தமிழக மாணவர்களை, பெற்றோர்களை, அவர்களது எதிர்காலத்தைச் சிதைக்கும் வகையில் பேசி வரும் ஆளுநரை வன்மையாகக் கண்டிக்கிறேன். இதன் அடையாளமாக ஆகஸ்ட் 15 அன்று, ஆளுநர் மாளிகையில், அவர் ஏற்பாடு செய்திருக்கும் தேநீர் விருந்தினைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.