தமிழ்நாடு மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவுக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம் - முதல்வர் உத்தரவு..!

Tamil Nadu Stalin Jayaranjan Planning Commission
By mohanelango Jun 06, 2021 06:21 AM GMT
Report

மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவுக்கு புதிய உறுப்பினர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

அதில், மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவின் முழு நேர உறுப்பினராக பேராசிரியர் ராம.சீனுவாசனும், துணைத் தலைவராக பேராசிரியர் ஜெ.ஜெயரஞ்சன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மருத்துவர் சிவராமன், டிஆர்பி ராஜா உள்ளிட்ட 8 பேர் பகுதி நேர உறுப்பினராக நியமனம் செய்யபப்ட்டுள்ளனர்.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில், மாநில திட்டக் குழு, முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால், 1971 ஆம் ஆண்டு மே திங்கள் 25 ஆம் நாள் ஏற்படுத்தப்பட்டது.

மாநில திட்டக் குழு, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையின்கீழ் ஒரு ஆலோசனை அமைப்பாக செயல்பட்டு, மாநிலத்தின் பல்வேறு வளர்ச்சிக்கான செயல்பாடுகளில் தனது பரிந்துரைகளை அரசுக்கு அளித்து வருகிறது.

மாநில திட்டக் குழு துணைத் தலைவர் அவர்களின்கீழ் வளர்ச்சி சார்ந்த முக்கிய துறைகளின் நிபுணர்களை உறுப்பினர்களாகக் கொண்டு இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது.

மாநில திட்ட குழுவானது, கடந்த 23.04.2020-ல் "மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவாக" மறுசீரமைப்பு செய்யப்பட்டு, அதன் இன்றியமையாத பணிகளான இலக்கு நிர்ணயிப்பது, கண்காணிப்பு, மதிப்பீடு மற்றும் கொள்கைக்கான ஆலோசனை வழங்குதல்,கொள்கை ஒத்திசைவு உருவாக்குதல், சிறப்பு திட்டங்களைச் செயல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவைப் பின்வருமாறு திருத்தியமைத்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதன்படி, பேராசிரியர் திரு. ஜெ.ஜெயரஞ்சன் வளர்ச்சி கொள்கைக் குழுவின் துணைத் தலைவராகவும்; பேராசிரியர் திரு. இராம. சீனுவாசன் அவர்கள் மாநில முழுநேர உறுப்பினராகவும், பேராசிரியர் திரு. ம. விஜயபாஸ்கர், பேராசிரியர் திரு. சுல்தான் அஹ்மத் இஸ்மாயில், திரு. மு. தீனபந்து, இ.ஆ.ப, (ஓய்வு), திரு. T.R.B. இராஜா, மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர், திருமதி. மல்லிகா சீனிவாசன், மருத்துவர் திரு. ஜோ. அமலோற்பவநாதன், சித்த மருத்துவர் கு. சிவராமன் மற்றும் முனைவர் நர்த்தகி நடராஜ் உள்ளிட்டோர் பகுதி நேர உறுப்பினர்களாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.