புதிதாக 10,000 மகளிர் சுயஉதவி குழுக்கள்...25 ஆயிரம் கோடி ஒதுக்கீடு...அதிரடியாக அறிவித்த முக ஸ்டாலின்
தமிழகத்தில் மேலும் 10,000 மகளிர் சுயஉதவி குழுக்களை துவங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் முக ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார்.
ஆலோசனை கூட்டம்
மாவட்ட அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுவான திஷா அமைப்பின் ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார்.
அப்போது கூட்டத்தில் பேசிய முதல்வர் முக ஸ்டாலின், மத்திய அரசு பங்களிப்புடன் தமிழகத்தில் பல்வேறு துறைகள் மூலம் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த திட்டங்களை தொடர்ந்து கண்காணித்தால் தான் தொய்வின்றி நிறைவு பெறும். அதற்காக தான் இதுபோன்ற ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.
10,000 சுயஉதவி குழுக்கள் இலக்கு
2023-24ஆம் ஆண்டில் புதிதாக 10,000 மகளிர் சுய உதவிக் குழுக்களை ஏற்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், அவற்றுக்கு சுழல் நிதியாக ரூ.25,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்தார்.
மேலும், பண்ணை வாழ்வாதார நடவடிக்கை பணிகளுக்காக 60 கோடி ரூபாயும், பண்ணை சாராத பணிகளுக்கான 18 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் கூறியுள்ளார்.