திருமாவிற்கு மாறிமாறி போன் செய்யும் ஸ்டாலின், இபிஎஸ்..!! மாறுமா அரசியல் களம்??
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு முதல்வர் முக ஸ்டாலினும், எதிர்க்கட்சி தலைவரும் எடப்பாடி பழனிசாமியும் தொலைபேசியில் நலம் விசாரித்துள்ளனர்.
திருமாவளவன் மருத்துவமனையில் அனுமதி
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர், சென்னை- நெல்லை இடையேயான வந்தே பாரத் ரயிலுக்கான துவக்க நிகழ்ச்சி, காங்கிரஸ் ஒபிசி பிரிவு சார்பில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கம் என அடுத்தடுத்து நிகழ்ச்சிகளில் திருமாவளவன் கடந்த சில நாட்களாக பங்கேற்று இருந்தார்.
தொடர்ந்து கட்சியின் சார்பில் நடத்தப்பட்டு வரும் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வரும் திருமாவளவன், உடல் சோர்வினால் பாதிக்கப்பட்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக அவருக்கு காய்ச்சல் ஏற்பட சென்னை வடபழனியிலுள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அவரை இரண்டு நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, கட்சியின் தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் யாரும் வரும் 30 ஆம் தேதி வரை அவரை சந்திக்க வர வேண்டாம் என்று கட்சியின் சார்பில் நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
அவரிடம் நேற்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின், தொலைபேசி மூலம் நலம் விசாரித்தார் என தகவல்கள் வெளிவந்தது. அதனை தொடர்ந்து இன்று காலை, தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும் தொலைபேசி மூலம் திருமாவளவனிடம் நலம் விசாரித்திருக்கிறார்.
நேற்றைய தினம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வன்னி அரசு தரப்பில் வெளியிடப்பட்ட ட்விட்டர் பதிவில், வரும் தேர்தலில் திமுகவுடன் தான் கூட்டணி என அறிவிக்கப்பட்ட நிலையிலும், அதிமுக பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியிருக்கும் சூழலில் அதிமுக புதிய கூட்டணி ஒன்றை கட்டமைக்கும் நெருக்கடியில் இருக்கின்றது.
அதன் காரணமாகவே தான் இந்த அழைப்பு நடைபெற்றிருக்குமா என்று கேள்விகள் எழுப்பப்பட்ட நிலையிலும், இந்த உரையாடலின் போது உடல்நலம் குறித்து மட்டுமே விசாரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசியல் களம் என்பதால் இது போன்ற கேள்விகள் எழுவதையும் நாம் எளிதில் கடந்து விட முடியாது.