திமுக பாஜக உடன் கூட்டணி வைத்ததே தவிர.. முதல்வர் ஸ்டாலின் பேச்சு
நாங்கள் பாஜக உடன் கூட்டணி வைத்தோமே தவிர, கட்சியை அடகு வைக்கவில்லை என முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் கரூர் பிரச்சாரம்
கரூர் சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.
இதில் பேசிய அவர், "கரூர் என்றால் அது கழகத்தின் கோட்டை. செப்டம்பர் மாதத்தில் நடைபெற்ற கழக முப்பெரும் விழாவின் எழுச்சியை விட, இப்போது கூடுதல் எழுச்சியை நான் இங்கு பார்க்கிறேன்.

கரூர் மாவட்டத்தைப் பற்றி எனக்கு எந்தக் கவலையும் இல்லை. ஏனென்றால், இது செந்தில் பாலாஜியின் கோட்டை. இங்கு 100% கழகத்தின் வெற்றி உறுதி.
செந்தில் பாலாஜிக்கு கோவை புகுந்த வீடுதான், கரூர் தான் பிறந்த ஊர். நான் தான் அவரை கோவையில் நின்று வென்று வர சொல்லி இருக்கிறேன். நம்முடைய மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றிபெறப் போவது உறுதி!உறுதி!உறுதி!
மாதம் தோறும் மகளிர் உரிமை தொகை 2000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும், புதுமைப் பெண், தமிழ் புதல்வன் திட்டப் பயணாளிக்கு இனிமேல் 1500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
வீட்டு உபயோக பொருட்களை வாங்கவும் பழைய பொருட்களை வழங்கிவிட்டு புதிய பொருட்கள் வாங்குவதற்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.8 ஆயிரம் மதிப்புள்ள கூப்பன்கள் வழங்கப்படும் என்று அறிவித்த நாளிலிருந்து இந்த திட்டத்தை பற்றி தான் தமிழ்நாடு முழுக்க ஒரே பேச்சாக உள்ளது!
முதலமைச்சராகப் பொறுப்பேற்ற உடனே, மகளிருக்கான 'விடியல் பயணம்' திட்டத்தில் கையெழுத்திட்ட மு.க.ஸ்டாலின் ஆகிய நான்தான் இன்று உங்களிடம் வாக்குக் கேட்டு வந்துள்ளேன். சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்தவன்தான் இந்த மு.க.ஸ்டாலின்.
தமிழ்நாட்டு மக்கள் என்னோடு இருக்கும் வரை, டபுள் என்ஜின்; டப்பா என்ஜின் என யாரும் இங்கே நுழைய முடியாது!
திமுக பாஜக உடன் கூட்டணி
பாஜகவின் பாதாமே சரணாகதி என்று கிடக்கும் எடப்பாடி அதிமுக-வின் அழிவு சக்தியாக மாறி சொந்த கட்சியை அழித்து வருகிறார். சொந்த கட்சியினருக்கே துரோகம் செய்யும் எடப்பாடி எங்களை பற்றி பேசலாமா?
வாஜ்பாய் அவர்களோடு கலைஞர் இருக்கும் புகைப்படத்தை காட்டிக்கொண்டு ஊர் முழுக்க பொய் சொல்லி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. திமுக பாஜகவோடு கூட்டணி தான் வைத்ததே தவிர கட்சியை அடகு வைக்கவில்லை.

நாங்கள் கூட்டணி வைத்த போது திமுக எங்களிடம் தான் இருந்தது. குறைந்த பட்ச செயல்திட்டத்தோடு தான் கூட்டணி வைத்தோம். இதை எதோ புலணாய்வு செய்தது போல் எல்லா இடத்திலும் பேசி வருகிறார். தான் ஒரு மங்குனி என்பதை மணிக்கொரு முறை பழனிசாமி நிரூபிக்கிறார்.
திராவிட மாடல் ஆட்சியில் சாதி, மதக் கலவரங்கள் இல்லை, வன்முறைகள் இல்லை. தமிழ்நாடு அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது. மக்கள் நிம்மதியாக வாழ்கிறார்கள்." என பேசியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |