சென்னை; பார்வையாளர்களை கவர்ந்த SRMPR Auto Tec அரங்கம்
சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் பயணிகள் வாகன கண்காட்சி 2.0 ஜுலை 31 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 2ஆம் தேதி வரை நடைபெற்றது.
ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கண்காட்சியில் எஸ்.ஆர்.எம் பி ஆர் ஆட்டோ டெக் மற்றும் அசோக் லேலண்ட், டாடா, டிவிஎஸ் வால்வோ, உள்ளிட்ட, 50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு, அதிநவீனபஸ், வேன், கார்கள் காட்சிப்படுத்தப்பட்டன.மேலும் 'பேட்டரிசார்ஜிங்' கருவிகள், புதிய வகை உதிரி பாகங்கள் இடம்பெற்றன.
மூன்று நாட்கள் நடைபெறும் இந்தக் கண்காட்சியை தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் மா.சிவசங்கர் தொடங்கி வைத்து, ஒவ்வொரு நிறுவனமும் காட்சிக்காக வைத்திருந்த வாகனங்களை நேரில் பார்வையிட்டு வாகனங்களுக்குள் சென்று, அவற்றின் பாதுகாப்பு வசதிகள் மற்றும் தொழில்நுட்ப அம்சங்களைப் பற்றி நிறுவன பிரதிநிதிகளிடம் கேட்டறிந்தார்.
குறிப்பாக எஸ்.ஆர்.எம் பி ஆர் ஆட்டோ டெக் நிறுவனத்தின் சார்பில் காட்சிபடுத்தப்பட்டுள்ள கேரவன், பயணிகள் பேருந்து மற்றும் பணியாளர் பேருந்து என மூன்று வாகனங்கள் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தன. அவற்றையும் அமைச்சர் சிவசங்கர் ஆர்வமுடன் பார்வையிட்டு, பாதுகாப்பு நடைமுறைகளை கேட்டறிந்தார்.
உற்பத்தியாளர்களுக்கு புதிய வாய்ப்பு
தொடக்க விழாவில் பேசிய அமைச்சர் சிவசங்கர், மோட்டார் வாகனத்துறையில் இந்தியாவில் தமிழ்நாடு சிறந்து விளங்கி வருகிறது.
இந்த கண்காட்சியால் மோட்டார் வாகன துறையில் உற்பத்தியாளர்களுக்கு புதிய வாய்ப்பு கிடைக்க உள்ளது எனவும் அரசு சார்பில் நடைபெறும் போக்குவரத்து துறை எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறதோ அதேபோன்று தனியார் போக்குவரத்து நிறுவனங்களும் செயல்பட்டால் தான் மக்கள் குறைகளை தீர்க்க முடியும் எனவும் தெரிவித்தார்.
40% EV வாகனங்களை தயாரிக்கும் தமிழ்நாடு
அவரை தொடர்ந்து தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா வாகன கண்காட்சியை பார்வையிட்டு உரையாற்றினார். இந்திய அளவில் விற்கப்படும் EV 4 சக்கர வாகனங்கள் 40% தமிழ்நாட்டில் தயாரிக்கப்படுகிறது. EV வாகனங்கள் சென்னையை தாண்டி கோவை போன்ற நகரங்களில் வர வேண்டும்.
EV வாகனங்களில் எடை தான் பிரச்சினை. எனக்கு என்ன பிரச்சினையோ அது தான் EV வாகனங்களிலும் பிரச்சனை. நாம் நம் சொந்த பொருளை தயாரித்து உருவாக்க வேண்டிய சூழல் உள்ளது. சொந்த உற்பத்தி மிக அவசியம் என தெரிவித்தார்.
டாக்டர் ரவி பச்சமுத்து பங்கேற்பு:
இந்தக் கண்காட்சிக்கு வருகை தந்த எஸ்.ஆர்.எம். பி.ஆர். குழுமத்தின் தலைவர் டாக்டர் ரவி பச்சமுத்துவை ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் மற்றும் எஸ்.ஆர்.எம் பி ஆர் ஆட்டோ டெக் நிறுவன ஊழியர்கள் வரவேற்றனர். தொடர்ந்து எஸ்.ஆர்.எம் பி ஆர் ஆட்டோ டெக் நிறுவனத்தின் சார்பில் காட்சிபடுத்தப்பட்ட வாகனங்களை காண்பித்தனர்.
பின்னர் ஊழியர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட டாக்டர் ரவிபச்சமுத்து முன்னணி நிறுவனங்களின் சார்பில் காட்சிபடுத்தப்பட்ட வாகனங்களுக்குள் சென்று பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப அம்சங்களைப் பற்றி கேட்டறிந்து பாராட்டினார். புதிய முயற்சிகளை நேரடியாகக் கண்டு உற்சாகம் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த பரிசளிப்பு விழாவில் பங்கேற்று, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிறுவன பிரதிநிதிகளுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்.
பார்வையாளர்களை கவர்ந்த SRMPR ஆட்டோ டெக் அரங்கம்:
எஸ்.ஆர்.எம் பி ஆர் ஆட்டோ டெக் நிறுவனத்தின் சார்பில் காட்சிபடுத்தப்பட்டுள்ள பணியாளர் பேருந்தில் பிரத்யேக சீட் பெல்ட், neck rest pillow, சாய்வுநாற்காலி, சாமான்களை வைப்பதற்கு என இடம், சிசிடிவி கேமரா, அவசர காலத்தில் எளிதாக வெளியேறும் வழி, ஏசி மற்றும் தானியங்கி வசதியுடன் வடிவமைக்கப்பட்ட பேருந்து என பல பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது.
நிறுவனங்களில் நாள் முழுவதும் வேலை செய்யும் பணியாளர்களை அழைத்து செல்லும் பேருந்தில் ஒவ்வொரு அம்சமும் மிகுந்த நேர்த்தியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பயணிகள் சொகுசு பேருந்து
பயணிகளுக்காக 2 +1 என்ற பிரத்யேக படுக்கும் வசதி மற்றும் உட்கார்ந்து பயணிக்கும் வகையில் இந்த பேருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. பேருந்து உள்ளே கழிவறை, பிரத்யேக சீட்டுகள், லக்கேஜ்களை வைப்பதற்கு என தனி இடம், செல்போன் சார்ஜ் செய்யும் வசதி என ஏராளமான வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
எஸ்.ஆர்.எம் பி ஆர் ஆட்டோ டெக் நிறுவனத்தின் சார்பில் காட்சிபடுத்தப்பட்ட இந்த வாகனங்களை பார்வையாளர்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு என்னென்ன வசதிகள் இருக்கிறது என்பதை கேட்டறிந்து செல்கின்றனர்.
நகரும் சொர்க்க வீடு
எஸ்.ஆர்.எம் பி ஆர் ஆட்டோ டெக் நிறுவனத்தின் சார்பில் வடிவமைக்கப்பட்டுள்ள வால்வோ EICHER கேரவன் நகரும் சொர்க்க வீடு என்று சொல்லாம். இந்த கேரவனில் இறக்குமதி செய்யப்பட்ட நான்கு பிரத்யேக சொகுசு இருக்கைகள் உள்ளன. சமையல் செய்வதற்கு தனி இடம், படுக்கை அறை, பிரம்மாண்ட டி.வி, உடைமாற்றும் அறை, குளியல் அறை, கழிவறை என வீட்டிலுள்ள அனைத்து வசதிகளும் இதில் செய்யப்பட்டுள்ளன. 400 லிட்டர் தண்ணீர் சேமிக்கும் வசதி கொண்ட இந்த கேரவனில் எவ்வளவு வேண்டுமானாலும் லக்கேஜ்களை வைத்து கொள்ளலாம்.
மூன்று நாட்கள் நடைபெற்ற இந்தக் கண்காட்சி, வாகனத் துறையில் புதிய தொழில்நுட்பங்களை நேரடியாகப் பார்க்கும் வாய்ப்பாக அமைந்ததோடு, பொதுமக்கள் மற்றும் தொழில்நுட்ப ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.