பாஜக தலைவர் அண்ணாமலையை சந்தித்த மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர் மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஜூலை 13ஆம் தேதி மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து ஜூலை 17ஆம் தேதி பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மரணத்திற்கு நீதி கேட்டு நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது.
இறந்த மாணவி தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பள்ளித் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி தலைமை ஆசிரியர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேரையும் சின்னசேலம் போலீசார் கைது செய்தனர்.
ஜாமீன் வழங்கிய நீதி மன்றம்
அவர்கள் 5 பேருக்கும் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை கீழமை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதையடுத்து ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர்கள் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மாணவியின் மரணத்தில் பல்வேறு முரண்பாடுகளை கூறினாலும், அந்த குற்றச்சாட்டுகள் பாலியல் குற்றச்சாட்டுக்கோ அல்லது கொலைக்கோ பொருந்தவில்லை .
மாணவி தனது கடிதத்தில், வேதியியல் சமன்பாடுகள் தனக்கு சரியாக தெரியவில்லை என்ற விவரத்தை வேதியியல் ஆசிரியை, கணித ஆசிரியையிடம் தெரிவித்ததாக கூறியுள்ளார். பிளஸ் 2 தேர்வு எதிர்காலத்துக்கு முக்கியமானது என்பதால் பல பெற்றோர் தங்களது குழந்தைகளை குடும்ப சூழல் குறித்து கவலை கொள்ளாமல் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக விடுதியில் தங்கவைத்து படிக்க வைக்கின்றனர்.
நல்ல கல்லூரியில் இடம் கிடைக்க வேண்டும் என்றால் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என குழந்தைகளை கட்டாயப்படுத்துகின்றனர். வேதியியல் பாடம் தனக்கு கடினமாக இருப்பதால் வீட்டிலிருந்து படிக்கிறேன் என அந்த மாணவி தனது பெற்றோருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மாணவியின் உடலில் ஏற்பட்டுள்ள காயங்கள் மற்றும் ரத்தக் கசிவுகள் மாடியில் இருந்து விழுந்ததால் ஏற்பட்டு இருக்கலாம். மர்ம உறுப்பிலும் காயங்கள் இல்லை என மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது மாடியில் ரத்த மாதிரிகள் இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
ஆசிரியர்கள் மிரட்டப்படுவது வருந்தத்தக்கது
அதை ஆய்வு செய்த தடய அறிவியல் துறை நிபுணர்கள், அது ரத்தம் அல்ல. சிவப்பு நிற பெயின்ட் என கூறியுள்ளனர்.கல்வி கற்றுத்தரும் ஆசிரியர்கள், மாணவர்களாலும் பெற்றோராலும் மிரட்டப்படுவது வருந்தத்தக்கது.
எனவே, போக்ஸோ சட்டப்பிரிவு 305 மனுதாரர்களுக்கு பொருந்தாது. ஆகவே, பள்ளி தாளாளர், செயலாளர், முதல்வர், ஆசிரியைகள் என 5 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் அளிக்கப்படுகிறது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது.
அண்ணாமலையை சந்தித்த ஸ்ரீமதி பெற்றோர்
இந்த நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை மாணவியின் பெற்றோர் சந்தித்து பேசியுள்ளனர். சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் பாஜக தலைவர் அண்ணாமலையை மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர் சந்தித்து பேசியுள்ளனர்.
அப்போது அண்ணாமலையிடம் மாணவி ஸ்ரீமதி உயிரிழந்ததது தொடர்பாக கோரிக்கை மனுவை அளித்தனர். தங்களுடைய மகள் தொடர்பான மரணத்தில் பல்வேறு சர்ச்சைகள் உள்ளது.
அதில் உள்ள மர்மங்களை கொண்டு வர பாஜக சார்பில் தங்களுக்கு ஆதரவு தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக சட்டரீதியாக பாஜகவும் ஆதரவு அளிக்கும் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளதாக கூறப்படுகிறது.