மாணவி ஸ்ரீமதி உடலில் ரத்த கட்டுக்காயங்கள் - வெளியானது 2வது பிரேதப்பரிசோதனை அறிக்கை
மாணவி ஸ்ரீமதியின் உடலில் ரத்த கட்டுக்காயங்கள் இருந்ததாக 2-வது பிரேதப் பரிசோதனை அறிக்கை கூறப்பட்டுள்ளதாக பிரபல செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
மாணவி உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் தனியார் பள்ளியில் ஸ்ரீமதி என்ற மாணவி 12ம் வகுப்பு படித்து வந்தார். கடலூர் மாவட்டம், வேப்பூர் அடுத்த பெரிய நெசலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் கடந்த 13ம் தேதி உயிரிழந்தார்.
இதைத்தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெரியளவில் வன்முறை நடைபெற்றது. இது குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து கனியாமூர் தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து மாணவியின் வழக்கு சிபிசிஐடி போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் மாணவியின் தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து மறு பிரேத பரிசோதனை நடத்த உத்தரவிடும்படி கேட்டுக் கொண்டார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்யும்படி உத்தரவிட்டார். ஜிப்மர் மருத்துவக் குழுவிடம் அறிக்கை ஒப்படைப்பு மேலும் பிரேத பரிசோதனையின் போது 3 மருத்துவ நிபுணர்களும் உடன் இருந்த நிலையில் அதனை பதிவு செய்யவும் உத்தரவிடப்பட்டது.
2வது பிரேத பரிசோதனை அறிக்கை ஜிப்மரிடம் ஒப்படைப்பு
தொடர்ந்து மாணவியின் பெற்றோர்கள் பிரேத பரிசோனை அறிக்கையில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மாணவியின் 2 பிரேத பரிசோதனை அறிக்கைகளையும், அதன் வீடியோக்களையும் 3 மருத்துவர்கள் கொண்ட ஜிப்மர் மருத்துவக் குழு மற்றும் தடயவியல் நிபுணர்களைக் கொண்டு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார்.
இதைத்தொடர்ந்து மாணவி ஸ்ரீமதியின் பிரேத பரிசோதனை அறிக்கைகள் மற்றும் வீடியோக்களையும் சிபிசிஐடி போலீசார் ஜிப்மர் மருத்துவக் குழுவிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த நிலையில் மாணவியின் 2வது பிரேதப் பரிசோதனை அறிக்கை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
2வது பிரேதப் பரிசோதனை அறிக்கை விவரங்கள் சில
* ஸ்ரீமதியின் இடுப்பு எலும்பில் முறிவு இருந்ததாகவும் 2வது பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தகவல்.
* நெஞ்சு எலும்புகளில் ஏற்பட்டுள்ள காயங்கள் குறித்து 2வது பிரேதப் பரிசோதனையில் விரிவாக விளக்கம்.
* இடது மார்பு பகுதிகளில் சிறிய காயம் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
* ஸ்ரீமதி உடலில் ரத்த கட்டுக்காயங்கள் இருந்ததாக முதல் பிரேதப்பரிசோதனையில் கூறப்படவில்லை.
* ஸ்ரீமதியின் முதல் மற்றும் 2வது பிரேதப் பரிசோதனை அறிக்கையில் சிறு வேறுபாடுகள் உள்ளன.
* 2வது பிரேதப் பரிசோதனையில் ரத்த கட்டுக்காயங்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
* முதல் பிரேதப் பரிசோதனையில் வலது நெஞ்சில் காயம் இருப்பதாக கூறப்பட்டிருந்தது.
* ஸ்ரீமதி உடலில் ரத்தகட்டு காயங்கள் இருந்ததாக முதல் பிரேதப்பரிசோதனை அறிக்கையில் தகவல் வெளியாகவில்லை.