ஈழத்தமிழர் பிரச்சினை சம்பந்தமாக விஜய் உடன்.. இலங்கை நாடாளுமன்றத்தில் ஒலித்த குரல்
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
நாளை மறுநாள்(மே 7) சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் வைத்து தவெக தலைவர் விஜய் தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்கும் விழா நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை நாடாளுமன்றத்தில் விஜய்க்கு வாழ்த்து
முதல் தேர்தலிலே பெருவாரியான வெற்றியை பெற்று ஆட்சியை பிடிக்க உள்ள தவெக தலைவர் விஜய்க்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரைத்துறையினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இலங்கை நாடாளுமன்றத்திலும் தவெக தலைவர் விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை நாடாளுமன்றத்தில் பேசிய இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சாணக்கியன் இராசமாணிக்கம் தவெக தலைவர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதில் பேசிய அவர், "கௌரவ சபாநாயகர் அவர்களே, இலங்கை தமிழரசு கட்சி தமிழ் மக்களின் இலங்கையில் உள்ள பிரதான கட்சி என்ற அடிப்படையிலே வரலாற்று வெற்றி படைத்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி விஜய்க்கு வாழ்த்துக்களை இந்த நாடாளுமன்றத்தில் நான் தெரிவித்து கொள்கிறேன்.

தமிழ்நாடு மக்களோடும், தமிழ்நாடு அரசோடும், ஈழத்தமிழர் பிரச்சினைகள் சம்பந்தமாக நாங்கள் பேச காத்துக்கொண்டிருக்கிறோம் என சொல்லிக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
அதை தொடர்ந்து பேசிய இராமநாதன் அர்ச்சுனா எம்பி, "எங்களுடைய தமிழ் மக்களின் இதயத்தை கவர்ந்த தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு இலங்கை தமிழனின் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.
வடக்கு மாகாணத்தில் தீவுப்பகுதிகளில் மின்சாரம் மக்களுக்கு சரிவர வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. நான் நெடுந்தீவுக்கு பகுதிக்கு சென்ற போது பாதிக்கு பாதி மக்களுக்கு மின்சாரம் இல்லை. 7 நாட்களில் இடங்களில் ஐந்து நாட்களுக்கு மின்சாரம் இல்லை.

விஜய் கச்சத்தீவை கேட்டார் என்பதற்காக அதனை தரமுடியாது என உங்கள் ஜனாதிபதி சொல்லிஇருக்கிறார். நாங்கள் சொல்கிறோம் கச்சதீவை மட்டுமில்லை யாழ்பாணத்தையும் சேர்த்து தமிழகத்திற்கு கொடுத்து விடுங்கள். தமிழக மக்கள் எங்களை பாதுகாத்து கொள்வார்கள்" என தெரிவித்துள்ளார்.
அதைத்தொடர்ந்து சிவஞானம் சிறீதரன் எம்.பியும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.