தமிழக மீனவர்கள் 20 பேரை கைது செய்த இலங்கை கடற்படை: எல்லை தாண்டியதாக குற்றச்சாட்டு
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 20 பேரை இலங்கை கடற்படையினர் இன்று அதிகாலை கச்சத்தீவு அருகே கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று 300 க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றிருந்தனர்.
அவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். திடீரென்று இன்று அதிகாலை ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 20 மீனவர்களை கைது செய்துள்ளனர்.

அத்துடன், இரண்டு படகுகளையும் இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். இதனால், இலங்கை கடற்படையினர் மீண்டும் அட்டூழியத்தில் ஈடுபட்டு வருவதாக தமிழக மீனவர்கள் கவலை தெரிவித்திருக்கிறார்கள். இதனையடுத்து, தமிழக மீனவர்களை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் அரசை கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் யாழ்பாணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்படுவார்கள் என தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.