இலங்கையில் அவசரநிலை பிரகடனம் ரத்து - நெருக்கடியால் தொடரும் பதற்றம்
இலங்கையில் அவசரநிலை பிரகடனத்தை ரத்து செய்து அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. அதேசமயம் உணவுப் பொருட்கள் உள்பட அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தினமும் 13 மணி நேர மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனிடையே நேற்றைய தினம் பிரதமர் மகிந்த ராஜபக்சே தவிர மற்ற அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்தனர். இதனைத் தொடர்ந்து இக்கட்டான நிலைமையை கையாளும் வகையில் 4 பேர் கொண்ட இடைக்கால அமைச்சரவை அமைக்கப்பட்டது. மேலும் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் னைத்துக்கட்சிகளும் இணைந்த தேசிய அரசை அமைக்க அதிபர் கோத்தபய ராஜபக்சே முடி வெடுத்தார்.
ஆனால் அதிபர் கோத்தபய மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலக வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அங்கு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலில் இருக்கும் அவசரநிலை பிரகடனம் திரும்ப பெறப்படுவதாக அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்துள்ளார்.