இலங்கை சிறையில் உள்ள 22 தமிழக மீனவர்களின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு
யாழ்ப்பாணம் சிறையில் உள்ள நாகை, காரைக்கால் பகுதியை சேர்ந்த 22 மீனவர்களின் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
நாகை, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, ராமேஸ்வரம் பகுதிகளிலிருந்து கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் அவர்களின் படகுகளை கைப்பற்றி கைது செய்வது வழக்கமாகி வருகிறது.
இலங்கை அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மீனவர்கள் தரப்பில் இருந்து தொடர்ந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது.
எனினும் இந்த பிரச்சினை தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.
இந்த விவகாரத்தில் தகுந்த முடிவு எட்டப்பட வேண்டும் என்று தமிழக அரசும் மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் கடந்த 22-ம் தேதி நாகை கீச்சாங்குப்பம் சேவாபாரதி குடியிருப்பை சேர்ந்த 9 மீனவர்களும், காரைக்கால் துறைமுகத்தில் இருந்து 13 மீனவர்களும் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற நிலையில்,
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கடந்த 24-ம் தேதி இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 22 மீனவர்களும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிறையில் அடைக்கப்பட்டிருந்த மீனவர்களின் நீதிமன்றக் காவல் முடிவடைந்த நிலையில் அவர்களை நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர் படுத்தப்பட்டது.
இந்நிலையில் இலங்கை ஊர் காவல்துறை நீதிமன்றம் 22 தமிழக மீனவர்களுக்கு வருகிற 23-ம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.