பிணையில் செல்ல வேண்டுமென்றால் தலா ஒரு கோடி ரூபாய் செலுத்துங்கள் - சிறையில் உள்ள தமிழக மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தை சேர்ந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை கடந்த 24-ம் தேதி எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை இலங்கை நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது, மீனவர்களுக்கு பிணை வழங்க கோரி கேட்கப்பட்டது.
அப்போது, தமிழக மீனவர்கள் பிணையில் செல்ல வேண்டுமென்றால் நபர் ஒருவருக்கு இந்திய ரூபாய் மதிப்பில் ஒரு கோடி செலுத்த வேண்டும் என்று இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை கேட்ட மீனவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
மேலும், 12 பேரும் கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் மே 12-ம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்துவரும் இலங்கைக்கு 7,600 கோடி ரூபாய் நிதியுதவியாக வழங்க இந்தியா முன்வந்துள்ள நிலையில், தமிழக மீனவர்களை விடுவிக்க ஒரு கோடி ரூபாய் பிணைத் தொகையாக செலுத்த வேண்டும் என்று இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.