மகிந்த ராஜபக்சேவை தவிர மற்ற அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா? - அதிர்ச்சி தகவல்

srilanka MahindaRajapaksa NamalRajapaksa SriLankaEconomicCrisis SriLankaProtests cabinetresigns cabinetministersresigns
By Petchi Avudaiappan Apr 04, 2022 12:30 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in உலகம்
Report

இலங்கையில் பிரதமர் மகிந்த ராஜபக்சேவை தவிர மற்ற அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. அதேசமயம் உணவுப் பொருட்கள் உள்பட அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தினமும் 13 மணி நேர மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. 

அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாததால் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சிக்கலை தீர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று இலங்கை அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று நாடு முழுவதும் மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் அதனை முறியடிக்கும் வகையில் 36 மணி நேர ஊரடங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அமல்படுத்தினார். 

இதனைத் தொடர்ந்து ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக 664 பேர் கைது செய்யப்பட்டனர். இத்தகைய சம்பவங்களால் இலங்கையில் பரபரப்பான சூழல் காணப்படுகிறது. அந்நாட்டு பிரதமர் மகிந்த ராஜபக்சே, அதிபரான தனது சகோதரர் கோத்தபய ராஜபக்சேவை சந்தித்தார். இதில் ராஜபக்சே பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக  கூறப்பட்டது. ஆனால் இதனை பிரதமர் அலுவலகம் உடனடியாக மறுத்து விளக்கமளித்தது. 

இதற்கிடையில் மகிந்த ராஜபக்சே மகனும், இலங்கையின் இளைஞர் நலன், விளையாட்டுத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்த நமல் ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்வதாக திடீரென அறிவித்துள்ளார். இந்நிலையில்  நள்ளிரவு வரை நீடித்த அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் மகிந்த ராஜபக்ச தவிர மற்ற அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உடனடியாக அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா கடிதத்தை மகிந்த ராஜபக்சேவிடம் வழங்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் இலங்கை அரசியலில் பல திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளது.