இலங்கை தமிழர்களுக்கு உதவ அனுமதிக்க வேண்டும் - பிரதமர் மோடியைச் சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை
பாராளுமன்றத்தில் 7 எம்.பி.க்களுக்கு மேல் உள்ள கட்சிகளுக்கு டெல்லியில் அலுவலகம் கட்டி கொள்ள மத்திய அரசு இடம் ஒதுக்கி கொடுத்தது. டெல்லியில் உள்ள தீன்தயாள் உபாத்யாயா மார்க் பகுதியில் திமுகவின் கட்சி அலுவலகம் கட்ட கடந்த 2013ம் ஆண்டு இடம் ஒதுக்கப்பட்டது.
மத்திய அரசு உறுதி அளித்த நிலையில், திமுகவின் அலுவலகம் டெல்லியில் கட்டப்பட்டு வந்தது. டெல்லியில் அமைந்துள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு அருகில் திமுக அலுவலக கட்டுமான பணிகள் நடந்தது வந்தன. தற்போது கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளது.
இதனையடுத்து, வரும் ஏப்ரல் 2ம் தேதி (சனிக்கிழமை) தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் உள்ள திமுக அலுவலகத்தை திறந்து வைக்கிறார். இந்த கட்டிடத்துக்கு அண்ணா- கலைஞர் அறிவாலயம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு 9 மணிக்கு சென்னையிலிருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். டெல்லி விமான நிலையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க. தலைவர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
இதன் பின்பு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு இல்லத்திற்கு சென்று தங்கினார். இன்று (வியாழக்கிழமை) காலை அவரை டி.ஆர். பாலு தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் சந்தித்து பேசினர்.
இந்நிலையில், பிரதமர் மோடியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசியுள்ளார். இந்தச் சந்திப்பில், பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை தமிழர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் மருந்து, அத்தியாவசிய பொருட்களை வழங்க, தமிழகருக்கு அனுமதி தேவை என்றும், தமிழர்கள் வசிக்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மற்றும் கொழும்பில் உயிர் காக்கும் மருந்துகளை வழங்க அனுமதிக்க வேண்டிய பிரதமர் மோடியிடம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.