இலங்கை கடற்படை அட்டூழியம்! இந்திய எல்லைக்குள் நுழைந்து 11 மீனவர்களை கைது செய்து அடாவடி
வங்கக்கடலில் கோடியக்கரைக்கு அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் மீனவர்கள் 11 பேரை அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்த இலங்கை கடற்படையினர் கைது செய்து கொண்டு சென்றுள்ள சம்பவம் தமிழக மீனவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அத்துமீறி நுழைந்த இலங்கை கடற்படை
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம், காரைக்கால்மேடு பகுதியைச் சேர்ந்த சண்முகம் மகன் ராஜ்குமார் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் ராஜ்குமார் உள்ளிட்ட 11 பேர் கடந்த பதினெட்டாம் தேதி அன்று காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.

நேற்று அவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே இந்திய எல்லையில் மீன்பிடித்து கொண்டிருந்த போது அங்கு அத்துமீறி இலங்கை கடற்படையினர் நுழைந்தனர்.
காரைக்கால் மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறிய இலங்கை கடற்படையினர் மீனவர்கள் 11 பேரையும் படகுடன் சிறைபிடித்து தங்களுடன் அழைத்துச் சென்றனர்.
மீனவர்கள் சிறைப்பிடிப்பு
சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் படகினை இலங்கை பருத்தித்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றனர். அங்கு விசாரணைக்கு பின் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என தெரிகிறது.
இந்திய எல்லைக்குள் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையால் இப்படி அத்துமீறி கைது செய்யப்படுவது தொடர்வது இரு மாநில மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.