இலங்கைக்கு உதவி செய்யும் இந்தியாவிற்கு நன்றி - கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூரியா
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது.
அதேசமயம் உணவுப் பொருட்கள் உள்பட அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தினமும் 13 மணி நேர மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இலங்கையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க சுமூகமான முறையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஐ.நா அறிவுறுத்தியுள்ளது.
மேலும், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் மீது தாக்குதல் நடத்துவது சரி கிடையாது என்றும் ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையில் நிலவி வரும் டீசல் கட்டுப்பாட்டை சமாளிக்க இந்தியா 40,000 டன் டீசலை கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைத்தது.
இந்நிலையில், பொருளாதார நெருக்கடிச் சூழலில் இலங்கைக்குப் பல உதவிகளைச் செய்து வரும் இந்தியாவிற்கு கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூரியா நன்றி தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து சனத் ஜெயசூரியா கூறுகையில், பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தியா மற்றும் பிற நாடுகள் இலங்கைக்கு உதவி செய்து வருகிறது. இதனால், இலங்கை மீண்டெழும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் மக்களுக்கு இந்தியா உதவி செய்து வருவதற்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.