போராட்டத்தை நிறுத்துங்கள்.. உங்களிடம் பேச்சுவார்த்தை நடத்த தயார்... - பிரதமர் மகிந்த ராஜபக்சே
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது.
அதேசமயம் உணவுப் பொருட்கள் உள்பட அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தினமும் 13 மணி நேர மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே, பிரதமர் மகிந்த ராஜபக்சே தவிர மற்ற அமைச்சர்கள் அனைவரும் பதவியை ராஜினாமா செய்தார்கள்.
இதனையடுத்து, இந்த இக்கட்டான நிலைமையை கையாளும் வகையில் 4 பேர் கொண்ட இடைக்கால அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க சுமூகமான முறையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஐ.நா அறிவுறுத்தியிருந்தது.
மேலும், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் மீது தாக்குதல் நடத்துவது சரி கிடையாது என்றும், எதிர்க்கட்சிகள், பல்வேறு சமூக அமைப்புகளுடன் அரசு ஆலோசனை நடத்தி அமைதியை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும் என்று ஐ.நா. தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இலங்கை அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருபவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே அறிவித்துள்ளார்.