இலங்கையில் போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் மீது தாக்குதல் நடத்துவது சரி கிடையாது - ஐ.நா. எச்சரிக்கை
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. அதேசமயம் உணவுப் பொருட்கள் உள்பட அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தினமும் 13 மணி நேர மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே, பிரதமர் மகிந்த ராஜபக்சே தவிர மற்ற அமைச்சர்கள் அனைவரும் பதவியை ராஜினாமா செய்தார்கள்.
இதனையடுத்து, இந்த இக்கட்டான நிலைமையை கையாளும் வகையில் 4 பேர் கொண்ட இடைக்கால அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் அனைத்துக்கட்சிகளும் இணைந்த தேசிய அரசை அமைக்க அதிபர் கோத்தபய ராஜபக்சே முடிவெடுத்துள்ளார்.
ஆனால், அதிபர் கோத்தபய மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இலங்கையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க சுமூகமான முறையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஐ.நா அறிவுறுத்தியுள்ளது. மேலும், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் மீது தாக்குதல் நடத்துவது சரி கிடையாது என்றும் ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது. எதிர்க்கட்சிகள், பல்வேறு சமூக அமைப்புகளுடன் அரசு ஆலோசனை நடத்தி அமைதியை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.