இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் - அமைச்சர் எச்சரிக்கையால் பரபரப்பு

srilanka fuel shortage அமைச்சர் உதய கம்மன்பில
By Petchi Avudaiappan Jan 07, 2022 08:01 PM GMT
Report

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என எரிசக்தித்துறை அமைச்சர் உதய கம்மன்பில எச்சரித்துள்ளார்.

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் இலங்கையில் அந்நியச் செலாவணி கையிருப்பை விட கடன் தொகை அதிகமாக உள்ளது. நாட்டில் இருக்கும் அந்நிய செலாவணியை வெளியில் சென்று விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கும் இலங்கை அரசு வெளிநாட்டிலிருந்து தானிய இறக்குமதியை நிறுத்தி உள்ளது. அதேசமயம் அங்கு தானிய விளைச்சலும் வீழ்ச்சியடைந்துள்ளது. 

இதன் காரணமாக உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விலைவாசி தாறுமாறாக உயர்ந்துள்ளது. நிலைமையை சமாளிக்க 1.2 பில்லியன் பொருளாதார நிவாரணத் தொகுப்பை அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் ஜனவரி மூன்றாவது வாரத்தில் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என எரிசக்தித்துறை அமைச்சர் உதய கம்மன்பில எச்சரித்துள்ளார்.

மேலும்  எரிபொருள் இறக்குமதிக்குத் தேவையான வெளிநாட்டு கரன்சியை செலுத்தும்படி மத்திய வங்கியை அவர் வலியுறுத்தி உள்ளார். ஏற்கனவே எரிபொருளை கொள்முதல் செய்ய முடியாத நிலையில் இருப்பதால், வரும் நாட்களில் மின்வெட்டு ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் தயாராக இருக்கும்படி இலங்கை மின்சார வாரியம் அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.