போராடி தோற்ற பெங்களூரு - ஆறுதல் வெற்றி பெற்ற ஹைதராபாத்
ஐபிஎல் தொடரின் பெங்களூரு அணிக்கெதிரான போட்டியில் ஹைதராபாத் அணி த்ரில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.
அபுதாபியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய ஹைதராபாத் அணியில் தொடக்க வீரர் ஜேசன் ராய் 44 ரன்களும், கேப்டன் கேன் வில்லியம்சன் 31 ரன்களும் விளாச நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அந்த அணி 7 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்தது.
பெங்களூரு அணி தரப்பில் அதிகப்பட்சமாக ஹர்சல் படேல் 3 விக்கெட்டுகளும், டேன் கிறிஸ்டியன் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதனையடுத்து 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணியில் கேப்டன் விராட் கோலி 5 ரன்களில் அவுட்டாக சீரான இடைவெளியில் அந்த அணி விக்கெட்டுகளை இழந்தது.
தேவ்தத் படிக்கல் 41 ரன்கள், மேக்ஸ்வெல் 40 ரன்கள் எடுக்க கடைசி ஓவரில் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் அந்த ஓவரை வீசிய புவனேஷ்வர் குமார் சிறப்பாக வீசி அணிக்கு வெற்றி தேடி தந்தார்.
பெங்களூரு அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் மட்டுமே எடுக்க 4 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி த்ரில் வெற்றி பெற்றது.