ஐ.பி.எல் 2022-ஐ எதிர்நோக்கி காத்திருக்கும் ஸ்ரீசாந்த்...இந்த முறையாவது வாய்ப்பு கிடைக்குமா?
ஐபிஎல் 2022 தொடருக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் ரசிகர்கள் இந்த வருட தொடரை பெருமளவில் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
இந்த ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் தக்கவைப்பு சமீபத்தில் நடந்து முடிந்தது. அதனை அடுத்து, வீரர்களின் ஏலம் பெங்களூருவில் வரும் பிப்ரவரி மாதத்தில் நடைபெற வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகின.
வரும் பிப்ரவரி மாதம் 12, 13-ம் தேதிகளில் இந்த மெகா ஏலம் நடைபெறும் என்பதை பிசிசிஐ உறுதி செய்திருக்கிறது.
2021 சீசன் வரை 8 அணிகள் மட்டுமே பங்கேற்று வந்த நிலையில், வருகிற சீசன் முதல் 10 அணிகள் பங்கேற்க உள்ளன. புதிதாக லக்னோ, அகமதாபாத் அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஐபிஎல் மெகா ஏலத்தில் பங்கெடுக்க வீரர்கள் பதிவு செய்ய வேண்டியது அவசியம். அந்த வரிசையில், வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் ஐபிஎல் மெகா ஏலத்தில் பங்கெடுப்பதற்காக பதிவு செய்து வருகின்றனர்.
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், இந்த ஏலத்தில் பங்கெடுக்க விருப்பம் காட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே, கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் பதிவு செய்திருந்த ஸ்ரீசாந்தை எந்த அணியும் வாங்கவில்லை.
இம்முறை மீண்டும் அவர் முயற்சியில் இறங்கியுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது.
கடைசியாக 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார். அப்போது பேசு பொருளான ‘மேட்ச் ஃபிக்சிங்’ புகாரில் சிக்கி, ஐபிஎல் தொடரில் இருந்து அவர் விலக்கி வைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.