ஆசிய கோப்பை ஹாக்கி - ஜப்பானை பந்தாடிய இந்தியா - கோல் மழையில் நனைந்தது
6-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி வங்காளதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் நடப்பு சாம்பியனான இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நேற்று ஜப்பானை எதிர்கொண்டு ஆடியது.
தொடக்கத்தலிருந்தே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி கோல் மழை பொழிந்து ஜப்பானை நிலைகுலைய வைத்தது. ஜப்பானால் கடைசி வரை ஒரு கோல் கூட திருப்ப முடியவில்லை.
முடிவில் இந்தியா 6-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை ஊதித்தள்ளியது. ஏற்கனவே, அரை இறுதியை உறுதி செய்து விட்ட இந்திய அணி தொடர்ச்சியாக பெற்ற 3-வது வெற்றி (ஹாட்ரிக்) இதுவாகும்.
தனது தொடக்க லீக்கில் தென்கொரியாவுடன் ‘டிரா’ கண்ட இந்திய அணி அதன் பிறகு வங்காளதேசம், பாகிஸ்தானை பந்தாடியுள்ளது. லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடித்த இந்தியா (10 புள்ளி), தென்கொரியா (6 புள்ளி), பாகிஸ்தான் (5 புள்ளி), ஜப்பான் (5 புள்ளி) ஆகிய அணிகள் அரை இறுதிக்கு முன்னேறின.
4 ஆட்டங்களிலும் தோற்ற வங்காளதேசம் வெளியேறியது.
நாளை நடைபெறும் அரை இறுதி ஆட்டங்களில் தென்கொரியா - பாகிஸ்தான், இந்தியா- ஜப்பான் அணிகள் மோத இருக்கின்றன.