இந்த இரண்டு பேரை இனி எடுக்க வேண்டாம்; இங்கிலாந்து அணிக்கு அட்வைஸ் கொடுத்த ஷேன் வார்னே
இந்திய அணியுடனான அடுத்த டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்தான தனது கருத்தை முன்னாள் வீரரான ஷேன் வார்னே ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த தொடரின் முதல் போட்டி மழை காரணமாக டிராவில் முடிந்தது. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இங்கிலாந்தின் லீட்ஸில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் ஒருவர் கூட சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ரன் எடுக்காததால் வெறும் 78 ரன்களுக்கே இந்திய அணி ஆல் அவுட்டானது.
இதனையடுத்து முதல் இன்னிங்ஸை துவங்கிய இங்கிலாந்து அணிக்கு ஜோ ரூட் 121 ரன்களும், டேவிட் மாலன் 70 ரன்களும், துவக்க வீரர்களான ஹசீப் ஹமீத் 68 ரன்களும், ரோரி பர்ன்ஸ் 61 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 432 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து 354 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய இந்திய அணிக்கு கே.எல் ராகுல் 8 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தார். மற்றொரு துவக்க வீரரான ரோஹித் சர்மா 59 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
கடந்த போட்டிகளில் சொதப்பிய புஜாரா 91 ரன்களும், கேப்டன் விராட் கோலி 55 ரன்களும் எடுத்து கொடுத்தாலும், அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்களில் ஜடேஜாவை தவிர மற்றவர்கள் அனைவரும் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்ததால் 278 ரன்கள் எடுத்த போது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 76 ரன்கள் மற்றும் ஒரு இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 1-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி சமநிலையையும் அடைந்தது. இந்திய அணியின் மோசமான இந்த தோல்வி கிரிக்கெட் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளதால், முன்னாள் வீரர்கள் பலர் இந்திய அணியின் இந்த தோல்வி குறித்தான தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அதே போல் சொதப்பிய வீரர்களை விமர்சித்தும் வரும் முன்னாள் வீரர்கள், அடுத்த போட்டியில் இந்திய அணி செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்தான தங்களது கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
பெரும்பாலான முன்னாள் வீரர்கள் இந்திய அணிக்கு தங்களது அட்வைஸ்களை வாரி வழங்கி வரும் நிலையில், முன்னாள் ஆஸ்திரேலிய வீரரான ஷேன் வார்னேவோ இங்கிலாந்து அணிக்கான தனது ஆலோசனையை வழங்கியுள்ளார்.
இது குறித்து பேசுகையில், “டேவிட் மாலன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளது இங்கிலாந்து அணியின் பேட்டிங் ஆர்டருக்கு கூடுதல் வலு சேர்த்துள்ளது. அடுத்த போட்டிக்கான இங்கிலாந்து அணியில் சாம் கர்ரானை எடுக்காமல் அவருக்கு பதிலாக மார்க் வுட் அல்லது ஒரு சுழற்பந்து வீச்சாளருடன் களமிறங்க வேண்டும். அதே போல் ஜேக் க்ராவ்லேவும் அணியில் சேர்க்கப்பட வேண்டும் என்பதே எனது கருத்து” என்று தெரிவித்துள்ளார்.