‘கோலி எப்படி டக்குன்னு எல்லா விஷயத்தையும் பேசுனாரு... அப்படி நீங்களும் பேசுங்க கங்குலி’ - ரவி சாஸ்திரி

sports-cricket virat-kohli-vs-ganguly ravi-shastri-speech
By Nandhini Dec 24, 2021 06:59 AM GMT
Report

விராட் கோலி அவர் தரப்பிலிருந்து எல்லாத்தையும் பேசிட்டார். இனி பிசிசிஐ தலைவர் தான் பேச வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

இந்திய டி20 அணியின் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகினார். ஒரு நாள் அணியின் கேப்டன் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார். விராட் கோலி கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்ட விவகாரமும், அதைச்சுற்றி நடந்த சம்பவங்களும் பெரும் சர்ச்சையாக தற்போது வெடித்துள்ளது.

இது குறித்து பேசிய பிசிசிஐ தலைவர் கங்குலி, விராட் கோலியை டி20 கேப்டன்சியிலிருந்து விலகவேண்டாம் என்று நான் தனிப்பட்ட முறையில் கூறினேன். ஆனால் அவர் அதை கேட்காமல் டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகிவிட்டார்.

வெள்ளைப்பந்து அணிகளை வெவ்வேறு கேப்டன்கள் வழிநடத்துவது சரியாக இருக்காது என்று தேர்வாளர்கள் கருதியதால், விராட் கோலி ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்டதாக தெரிவித்தார்.

ஆனால், தென்னாப்பிரிக்காவிற்கு கிளம்புவதற்கு முன்பாக பிரஸ் மீட்டில் பேசிய விராட் கோலி, நான் டி20 அணியின் கேப்டன்சியிலிருந்து விலகுவதாக கூறியபோது, அதை பிசிசிஐ தரப்பில் முழுமனதாக ஏற்றுக்கொண்டனர். கேப்டன்சியிலிருந்து விலகவேண்டாம் என்று என்னிடம் யாரும் கூறவில்லை.

என்னை ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்து நீக்குவதாக கடைசி நேரத்தில் தான் தெரிவித்தனரே தவிர, முன்கூட்டியே தெரிவிக்கவில்லை என்றார் கோலி.

பிசிசிஐ தலைவர் கங்குலியின் கருத்துக்கு கோலியின் கருத்து முற்றிலும் முரண்பாடாக இருந்ததையடுத்து, இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாகவும், விவாதப்பொருளாகவும் மாறியுள்ளது. இந்த விவகாரம் குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

விராட் கோலியிடம் முன்கூட்டியே கேப்டன்சி நீக்கம் குறித்து தெரியப்படுத்தியிருக்கலாம் என்பதே முன்னாள் வீரர்கள் பலரது கருத்தாக உள்ளது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேசியுள்ளார்.

இது குறித்து அவர், கோலி அவர் தரப்பிலிருந்து பேச வேண்டிய அனைத்தையும் பேசிவிட்டார். இனி பிசிசிஐ தலைவர் கங்குலி தான் பேச வேண்டும். கேப்டன் பதவி நீக்கம் குறித்து முன்கூட்டியே கோலியிடம் தெரியப்படுத்தி இருக்கலாம். அப்படி செய்திருந்தால் இந்த விவகாரத்தை நல்லவிதமாக கையாண்டிருக்கலாம் என்றார்.