தன்னை சுற்றி பல சம்பவங்கள் நடந்தபோதும் கோலி அசத்தலாக செயல்படுகிறார் - ராகுல் டிராவிட் பெருமிதம்
இந்திய கிரிக்கெட் அணியின் 3 வடிவிலான போட்டிக்கு விராட் கோலி கேப்டனாக இருந்தார். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டி தொடங்குவதற்கு முன்பு, 20 ஓவர் போட்டிக்கான கேப்டன் பதவியிருந்து விலகிக் கொள்வதாக விராட் கோலி அறிவித்தார். ஆனால் உலக கோப்பையில் இந்திய அணியின் செயல்பாடு மிகவும் மோசமாக இருந்திருந்தது.
இதனையடுத்து, யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அதிரடியாக நீக்கிவிட்டது. இவ்விவகாரம் கிரிக்கெட் ரசிகர்கள் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும், சலசலப்பையும் ஏற்படுத்தியது.
இதனால், விராட் கோலி தற்போது இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக மட்டுமே செயல்பட்டு வருகிறார். ஒருநாள் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலியை நீக்குவதற்கு முன்னர் அவருக்கு போதிய கால அவகாசம் கொடுக்கப்படவில்லை என்று பிசிசிஐ மீது குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.
இவ்விவகாரத்தில் பிசிசிஐ தலைவர் கங்குலிக்கும், விராட் கோலிக்கும் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டு வந்ததாக தகவல்கள் வெளியாயின.
இந்நிலையில், சுற்றி பல சம்பவங்கள் அரங்கேறிக்கொண்டிருந்தபோதும், கடந்த 20 நாட்களாக கோலி அசத்தலாக விளையாடி வருகிறார் என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து, டிராட் அவர் கூறுகையில், கோலியை சுற்றி நிறைய சம்பவங்கள் அரங்கேறிக்கொண்டு வருகிறது என்பது எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால் உண்மையை சொன்னால், மன உறுதியை உயர்வாக வைத்திருப்பது மிகவும் கடினம் கிடையாது என்பதை கேப்டன் கோலி வழிநடத்துகிறார்.
நாங்கள் இங்கு (தென் ஆப்பிரிக்கா) வந்த கடந்த 20 நாட்களாக பயிற்சியில் ஈடுபடுவதிலும், அணியுடன் இணைந்து செயல்படுவதிலும் கோலி அசத்தலாக செயல்பட்டுக் கொண்டு வருகிறார்’ என்றார்.