‘அணியின் தலைவனா இருக்குறதுக்கு கேப்டனா இருக்க தேவையில்லை..’ - மனம் திறந்து கெத்தா பேசிய விராட் கோலி
கேப்டன் பதவியிலிருந்து விலகிய விராட் கோலி, இந்திய அணியில் தனது ரோல் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அப்போது அவர், அணியின் தலைவனாக இருப்பதற்கு கேப்டனாக இருக்க வேண்டிய அவசியம் கிடையாது என்று தெரிவித்திருக்கிறார்.
2014ம் ஆண்டு இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்ற விராட் கோலி, 2017ம் ஆண்டு வெள்ளைப்பந்து அணிகளின் கேப்டன் பதவியையும் ஏற்றார். கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அணியின் கேப்டனாக விராட்கோலி இருந்து வந்தார்.
இந்நிலையில், அனைத்துவிதமான அணிகளின் கேப்டன் பதவியிலிருந்து அவர் விலகிவிட்டார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பின் டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விலகிய கோலி, இனிமேல் இந்திய அணியில் ஒரு சாதாரண வீரராக ஆட இருக்கிறார்.
விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம் கடந்த 2 ஆண்டுகளாக அவரது அல்டிமேட் திறமையின் அளவிற்கு இல்லாமல் போனது. 70-80 ரன்கள் ஸ்கோர் செய்தாலும், அவர் சதமடித்து 2 ஆண்டுகளுக்கும் மேலாகி உள்ளது. எனவே கேப்டன் பதவியிலிருந்து விலகிய கோலி, கேப்டன்சி அழுத்தம் இல்லாததால் இனிமேல் பேட்டிங்கில் அசத்துவார் என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு மேலோங்கி உள்ளது.
இனிமேல் விராட் கோலி இந்திய அணியில் கேப்டனாக இல்லாமல் ஒரு சாதாரண வீரராக ஆடவுள்ள நிலையில், அவரது ரோல் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது.
அப்போது அவர் பேசுகையில், அணியின் தலைவனாக திகழ்வதற்கு கேப்டனாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்று கெத்தாக தெரிவித்துள்ளார். தோனி கேப்டன்சி பதவிலிருந்து விலகி, இந்திய அணியில் ஒரு வீரராக ஆடியபோதும் கூட, அவர் அணியின் லீடர்களில் ஒருவர் தான். எனவே அணியின் லீடராக இருப்பதற்கு கேப்டனாக இருக்க வேண்டியது தேவையில்லை என்றார்.