நீங்கள் கண்ணில் கண்ணீருடன் இருந்தபோது, நான் உங்கள் அருகில் இருந்துள்ளேன்.. - அனுஷ்கா உருக்கமான பதிவு

virat kohli anushka sharma sports cricket
By Nandhini Jan 17, 2022 10:28 AM GMT
Report

இந்திய ஒருநாள், டி20 அணிக் கேப்டன் பதவிகளிலிருந்து விலகிய விராட் கோலி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்த பிறகு டெஸ்ட் அணிக் கேப்டன் பதவியையும் ராஜினாமா செய்திருக்கிறார்.

இதனையடுத்து, ரோஹித் ஷர்மா, ரவி சாஸ்திரி போன்றவர்கள் கோலியின் சேவைக்கு நன்றி கூறி சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். தற்போது விராட் கோலியின் மனைவி அனுஷ்கா ஷர்மாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கோலி குறித்து உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு -

2014-ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து மகேந்திரசிங் தோனி ஓய்வுபெற முடிவு செய்ததால், ‘எனக்கு (கோலி) கேப்டன் பதவி கிடைத்துள்ளது’ என நீங்கள் என்னிடம் சொன்னீர்கள்.

அந்த நாள் எனக்கு நினைவிருக்கிறது. அந்த நாளின் முடிவில் நீங்கள், நான், தோனி மூவரும் உரையாடிக் கொண்டிருந்தோம். அப்போது, ‘கோலி உங்கள் தாடி விரைவாக நரைக்கத் தொடங்கும்’ என்று கேலி செய்தார். அதுவும் எனக்கு நினைவு இருக்கிறது. நாம் மூவரும் அதைபற்றி பேசி சிரித்தோம். அன்று முதல் உங்கள் தாடி நரைப்பதைவிட, உங்களின் வளர்ச்சிதான் அதிகமாக இருந்தது.

அதை நான் கண்கூடாக கண்டேன். கேப்டனாக அணியை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் சென்றது, அப்போது நீங்கள் செய்த சாதனைகளை நினைத்து பெருமை கொள்கிறேன். 2014ம் ஆண்டு, நாம் சிறியவர்களாக இருந்தோம்.

நல்ல எண்ணம், நேர்மறை சிந்தனைதான் நம்மை முன்னெடுத்துச் செல்லும் என நினைத்தோம். ஆனால், சவால்கள் இல்லாமல் இல்லை. நீங்கள் சந்தித்த பல சவால்கள் களத்தில் மட்டுமல்ல. உங்களின் நல்ல நோக்கத்திற்கு இடையூறு செய்யும் எதையும், நீங்கள் அனுமதிக்காமல் இருந்ததை நினைத்து பெருமைப்படுகிறேன்.

பல தோல்விகளுக்கு பிறகும், அணியை கட்டுக்கோப்பாக வழிநடத்தி, ஆற்றலின் ஒவ்வொரு துளியையும் அணிக்கு கொடுத்து, வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ளீர்கள். சில நேரங்களில் நீங்கள் கண்ணில் கண்ணீருடன் இருந்தபோது, நான் உங்கள் அருகில் இருந்துள்ளேன். அப்போது, ‘இன்னும் ஏதாவது செய்திருக்கலாமே’ என நீங்கள் கூறினீர்கள்.

இதுதான் நீங்கள். இதைத்தான் நீங்கள் மற்றவர்களிடம் எதிர்பார்க்கிறீர்கள். இதுதான் உங்களை சிறந்தவராக்குகிறது. இவை அனைத்திற்கும் அப்பால் உங்களிடம் தூய்மையான கலப்படமற்ற நல்ல நோக்கங்கள் எப்போதும் இருந்தன. அனைவராலும் அதனை புரிந்துகொள்ள முடியாது.

இவ்வாறு அனுஷ்கா ஷர்மா உருக்கமாக தெரிவித்துள்ளார்.

நீங்கள் கண்ணில் கண்ணீருடன் இருந்தபோது, நான் உங்கள் அருகில் இருந்துள்ளேன்.. -  அனுஷ்கா உருக்கமான பதிவு | Sports Cricket Virat Kohli Anushka Sharma